Ads Area

சம்மாந்துறை பிரதேச சபையை எமது அணி கைப்பற்றினால் மாட்டிறைச்சி விலையினை 1200 ரூபாவாக குறைப்போம்.

பாறுக் ஷிஹான்

எதிர்வரும் காலங்களில் சம்மாந்துறை பிரதேச சபையை எமது அணி கைப்பற்றியதுடன், மாட்டிறைச்சியின் விலையை உடனடியாக 1,200 ரூபாவாக குறைக்கவுள்ளோம்.

தமிழ் பேசும் மக்கள் அரசியல் அனாதைகளாக தற்போதிருக்கின்ற நிலையில் அதனை நிவர்த்தி செய்ய நாம் பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் என நாபீர் பவுண்டேஷன் இஸ்தாபகரும் சமூக சேவையாளருமான கலாநிதி யூ.கே.நாபீர்  குறிப்பிட்டார்.

உள்ளூராட்சித்தேர்தல் -2023 தொடர்பில் அம்பாறை  ஊடக மையத்தில் அண்மையில் (23) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது,

உள்ளூராட்சிமன்ற வேட்புமனுத்தாக்கல் நிறைவுற்றுள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் சம்மாந்துறை பிரதேச சபைக்காக கட்டுப்பணம் மற்றும் வேட்புமனுத்தாக்கல்களை மேற்கொண்டுள்ளோம்.

எதிர்வரும் மார்ச் மாதம் 09ம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடவுள்ளோம்.

சம்மாந்துறை சகல வளங்களையும் கொண்ட பிரதேசமாகும். இங்கு தமிழ், முஸ்லீம் ஏனைய சமூக அமைப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டு எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவுள்ளோம்.

கடந்த 2 தசாப்தங்களாக பல அரசியல்வாதிகளை அமுக்க குழுக்கள் போல் அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றோம். சம்மாந்துறை பகுதிகளில் பல கட்சிகள் காலூன்றி காணப்பட்ட போதிலும், எதுவித உரிமைகளையோ அல்லது அபிவிருத்தியையோ பெற்றதாக நாம் காணவில்லை.

எனவே, எதிர்வரும் காலங்களில் எமது பகுதி பிரச்சினைகளை நாம் இனங்கண்டுள்ளோம். தற்போது மக்களுக்குத் தேவையானது கொள்கை ரீதியான அரசியலல்ல. தற்போது மக்களுக்கு வாழ்வாதாரம் சார்ந்த அபிவிருத்தியே குறிக்கோளாக காணப்படுகின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினைக்கு எவ்வாறு முகங்கொடுக்க முடியுமென்ற குறிக்கோளில் எமது மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

எனவே தான், எதிர்வரும் தேர்தலில் மக்களின் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எதிர்பார்த்து களமிறங்கியுள்ளோம்.

100 வீதம் இப்பிரச்சினைகளைத்தீர்க்க முடியாத நிலையிலும் ஒரு குறிப்பிட்டளவிற்காவது அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

அத்துடன், எமது திட்டங்கள் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் தேர்தல் விஞ்ஞாபனத்தினூடாக அறிவிக்கவுள்ளோம்.

குறிப்பாக, சகல மக்களாலும் தற்போது நுகரப்படுகின்ற இறைச்சி வகைகளில்  மாட்டிறைச்சியின் விலை ஏனைய பிரதேசங்களை விட சம்மாந்துறைப் பகுதியில் அதிகளவில் காணப்படுகின்றது.

இங்கு விலை அதிகரிப்பினால் மாட்டிறைச்சியை விற்பவர்களை குறை கூற முடியாது.பிரதேச சபையின் குத்தகை பெறுமானம் அதிகமாக இருப்பதே விலையேற்றத்திற்கு பிரதான காரணமாகும். இதனால் மாட்டின் விலை எற்றப்படுகின்றது.

நாளடைவில் மக்களின் பொருளாதார விடயத்தில் தாக்கம் செலுத்துகின்றது. இதனை எவ்வாறு கட்டுப்படுத்த முடியுமென்பதை நாம் திட்டமிட்டுள்ளோம்.

எதிர்வரும் காலங்களில் சம்மாந்துறை பிரதேச சபையை எமது அணி கைப்பற்றியதுடன், மாட்டிறைச்சியின் விலையை உடனடியாக 1,200 ருபாவாகக் குறைக்கவுள்ளோம்.

தமிழ்ப்பேசும் மக்கள் அரசியல் அனாதைகளாக தற்போதிருக்கின்ற நிலையில், அதனை நிவர்த்தி செய்ய நாம் பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் எனக்குறிப்பிட்டார்.

அம்பாறை மாவட்டத்தில் பொருளாதார ரீதியான அபிவிருத்தி முன்னெடுப்துடன், பாரிய உரிமை இருப்பு சார்ந்த விடயங்களையும் இளைஞர்களின் வேலைவாய்ப்பினையும் முன்னெடுக்கவுள்ளோம். 

எம்மதமும் சம்மதம் என்ற நிலையில் எமது வேலைத்திட்டங்கள் அமையுமென நம்பிக்கை வெளியிட்டார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe