பாறுக் ஷிஹான்
அறுவடை இடம்பெறும் நிலையில், மூன்றிடங்களில் 30க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக ஊருக்குள் நுழையும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் அறிந்த சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் நேற்று மாலை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர்களுடன் குறித்த இடத்திற்குச் சென்று பார்வையிட்டார்.
இதன்போது, விவசாயிகள், வயல் நிலங்கள், ஊர்மக்களைப் பாதுகாப்பதற்கு முடியுமான நடவடிக்கைகளை மேற்கொண்டு யானைகளை காட்டுப்பகுதிக்குள் அனுப்பபுவதற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதே வேளை, சம்மாந்துறை பிரதேசத்தில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டவர்களில் கடந்த வெள்ளிக்கிழமை (24) அதிகாலை யானை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது விடயம் தொடர்பில், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் தௌபீக் அவர்களை தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டு பிரதேசத்தில் யனைகளினால் பலர் மரணமடைந்துள்ளதுடன், பொதுமக்களின் உடமைகளையும் நாளாந்தம் சேதப்படுத்துவதையும் தெளிவுபடுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, சம்மாந்துறை பிரதேசத்தில் யானைகளினால் ஏற்படும் பிரச்சினைகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பான அவசர கலந்துரையாடல் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ.டக்ளஸ் தலைமையில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதில் சம்மாந்துறை பிரதேச சபைத்தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் மாவட்ட உதவிப்பணிப்பாளர் பிரசாந்த, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் எம்.சீ.எம்.றியாஸ், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களான ஜெகதீஸ், சுரேஸ்குமார், சிசிரகாமினி, கித்சிறி மெமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் சேதம் ஏற்படுத்தும் குறித்த ஒரு யானையை இனங்கண்டுள்ளதாகவும் அதனை வனவிலங்கு சரணாலயத்திற்கு இன்று ஏற்றிச் செல்லுவதற்கான நடைவடிக்கை எடுப்பதாகவும் விவசாய நடவடிக்கை முடியும் வரை யானைகளை வனவிலங்கு பாதுகாப்பு செயலணியும் சிவில் பாதுகாப்புப் படையும் இணைந்து விவசாயிகளின் பாதுகாப்பை வயல் நிலப்பகுதிகளில் உறுதிப்படுத்துவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
அதனுடன் நீண்டகாலப் பாதுகாப்புத் திட்டதினையும் தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.