பாறுக் ஷிஹான்
எரிவாயு சிலிண்டர்கள் உள்ளிட்ட நீர்ப்பம்பிகள் முதலானவற்றை திருடி விற்பனை செய்து வந்த திருடர் குழுவினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளிலும் வீட்டுக்கு கூரையை பிரித்துக்கொண்டு உள்ளே இறங்கி எரிவாயு சிலிண்டர்கள் உள்ளிட்ட பொருட்களை களவாடி விற்பனை செய்து வந்த குழுவினரை கடந்த வெள்ளிக்கிழமை (3) மாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம்.நஜீம் தலைமையிலான சிறு குற்றத்தடுப்பு பிரிவுப் பொறுப்பதிகாரியும் உப பொலிஸ் பரிசோதகருமான குணரட்ன, விசேட புலனாய்வுப்பிரிவு உத்தியோகத்தர் றிகான் குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையினால் களவாடப்பட்ட 17 எரிவாயு சிலிண்டர்கள், 05 நீர் இறைக்கும் கருவிகள், 01 துவிச்சக்கர வண்டி, 01 றோல் கோஸ், பைப் 01 சுவர் வெட்டும் இயந்திரம் என்பன மீட்கப்பட்டுள்ளது.
இதன் போது கைதான 21 மற்றும் 23 வயதுடைய சந்தேக நபர்கள் உட்பட திருடப்பட்ட பொருட்களை கொள்வனவு செய்ததாகக் கூறப்படும் 26 வயதுடைய சந்தேக நபரையும் சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றத்தில ஆஜர்படுத்த நிந்தவூர் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

