Ads Area

குடும்பஸ்தரைப் பதம் பார்த்த பிள்ளையானின் வாகனத்தொடரணி : படுகாயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி.



 பாறுக் ஷிஹான்


 தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அவிருத்திக்குழுத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானின் வாகனத்தொடரணியில் சிக்குண்டு குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


 அம்பாறை மாவட்டம், கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உள்ளக வீதியில் நேற்று சனிக்கிழமை (15) மாலை இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.


 இரு உள்ளக வீதிகளை இணைக்கின்ற நாற்சந்தியில் எதிரும் புதிருமாக வந்த பிள்ளையானின் வாகனத்தொடரணியில் பங்கேற்ற கெப் ரக வாகனமும் மறுமுனையில் வந்த மோட்டார் சைக்கிளும் மோதி இவ்விபத்து இடம்பெற்றது.


 இதன் போது குறித்த விபத்து சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 65 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டார்.


 சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு  விபத்திற்குள்ளான கெப் ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றனர்.


 மேலும், அம்பாறை மாவட்டத்திற்கு சித்திரை புத்தாண்டு நிகழ்ச்சிக்காக காரைதீவு கல்முனை பகுதிகளுக்கு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அவிருத்திக்குழுத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe