பாறுக் ஷிஹான்.
பாடசாலை மாணவிகளின் மாதவிடாய் தொடர்பில் மாணவர் தலைவியிடம் தகவல் கோரிய அதிபர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி கோட்ட பாடசாலையொன்றின் அதிபரே இவ்வாறு அடிக்கடி விடுமுறை எடுக்கின்ற பாடசாலை மாணவிகளின் மாதவிடாய் தொடர்பில் மாணவத்தலைவிகளிடம் தகவல் கோரியதாக கல்முனை பிராந்திய மனித உரிமை காரியாலயத்தில் கடந்த 23.08.2023ம் திகதி முறையிடப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டினை மாணவத்தலைவி உள்ளிட்ட பெற்றோர்கள் மேற்கொண்டுள்ளதுடன், பாடசாலை அதிபருக்கு இவ்விடயம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக அழைப்பாணை வழங்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த விசாரணையில் பாடசாலை அதிபர் குறித்த மாணவத்தலைவியை தனது அறைக்குள் அழைத்து மாணவிகளின் வரவு வீதம் குறைவாகவுள்ளதாகவும் இதற்கு காரணம் மாதவிடாய் என தான் அறிவதாகவும், எனவே, ஒரு கொப்பியில் தினமும் மாதவிடாய் எந்த மாணவிகளுக்கு ஏற்படுகின்றது. எத்தனை நாட்களின் பின்னர் மாதவிடாய் நிறைவடைகின்றது. மாதவிடாய் காரணமாக தான் மாணவர்கள் பாடசாலைக்கு இடைநடுவில் செல்கின்றார்களா? அல்லது பாடசாலைக்கு ஏன் சமூகமளிக்கவில்லை? என வினவி உரிய மாணவர்களின் தகவலுடன் தன்னை தினமும் சந்தித்து கூற வேண்டுமென அதிபர் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், குறித்த விடயம் தொடர்பாக அப்பாடசாலையிலுள்ள சில மாணவிகள், ஆசிரியர்கள் மீது எதிர்வரும் சில தினங்களளில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.