பாறுக் ஷிஹான்
சட்டவிரோதமாக உரப்பை மூலம் மோட்டார் சைக்கிள் மற்றும் மாட்டு வண்டிகளில் கடற்கரை மண் கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
காலநிலை மாற்றம் மற்றும் இரவு வேளைகளில் இனந்தெரியாத சிலர் இலக்கத்தகடுகளற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் மாட்டு வண்டிகள் மூலம் அதிகளவான மணல் உரப்பையின் உதவியுடன் சட்டவிரோதமாக அள்ளிச்செல்கின்ற செயற்பாடு அதிகரித்துள்ளது.
இச்செயற்பாடானது பெரிய நீலாவணை, பாண்டிருப்பு, மருதமுனை, கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர் பகுதிகளில் பரவலாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
தற்போது இரவு வேளை ரோந்து சேவைகள் இடம்பெறாமையினால் இச்சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி கடத்தல்காரர்கள் இச்சட்டவிரோதச் செயற்பாட்டினை முன்னெடுத்து வருகின்றனர்.
குறிப்பாக, கடந்த காலங்களில் பொலிஸார், இராணுவம், கடற்படையினர் இணைந்து கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமை திணைக்களம் உத்தியோகத்தர்களும் இவ்வாறான சட்டவிரோதச் செயற்பாடுகளை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
இருப்பினும், அம்பாறை மாவட்டத்தின் பெரிய நீலாவரணை முதல் நிந்தவூர் வரையான கடற்கரையோரங்களில் சட்டவிரோதமாக மணல் கடத்தல் இடம்பெற்று வருவதுடன், பாரிய மண்ணரிப்புகளும் இப்பகுதிகளில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பித்தக்கது.