Ads Area

அடி காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட நபரின் மரணத்தில் சந்தேகம் : உடற்கூறு பரிசோதனைக்கு உத்தரவு

 கொலையா? இயற்கை மரணமா? 


அடி காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட நபரின் மரணத்தில் சந்தேகம் : உடற்கூறு பரிசோதனைக்கு உத்தரவு 


(நூருல் ஹுதா உமர், ஹிஷாம் ஏ பாவா) 


சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் மரணமடைந்த உடலொன்று வைக்கப்பட்டுள்ளது. 


குறித்த உடல் தொடர்பில் தெரிய வருவதாவது,


கடந்த 2023.11.23 அன்று 66 வயதுடைய கலந்தர்ஷா ஆதம்பாவா எனும் சாய்ந்தமருது 16 ஐச்சேர்ந்த ஒருவர் சண்டையொன்றில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சிறிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த முதியவருக்கு அனுமதிக்கப்பட்ட தினத்திலிருந்து வைத்தியசாலை சிகிச்சையளித்து வந்ததாகவும் இன்று (26) அதிகாலை 04.30 மணியளவில் அவருக்கு உடலில் நோவு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் மரணமடைந்துள்ளதாகவும், மரணத்திற்கான காரணம் என்னவென்பதை சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கையின் பின்னரே அறிய முடியுமென்றும் மரணம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸாருக்கு மேலதிக நடவடிக்கைக்காக அறிவித்துள்ளதாகவும் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை வைத்திய அதிகாரியொருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.


இன்று காலை காலமான 66 வயதுடைய கலந்தர்ஷா ஆதம்பாவா என்பவரின் குடும்பத்தினர் இம்மரணத்தில் சந்தேகமிருப்பதாகவும் வைத்தியசாலைய்தரப்பினர் வெளியிடும் கருத்தில் தங்களுக்கு உடன்பாடில்லை என்றும் சாய்ந்தமருது பொலிஸார் சந்தேக நபரின் தரப்பிடமிருந்து கையூட்டு பெற்றுக்கொண்டு ஒரு பக்கசார்பாக நடப்பதாகவும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆதம்பாவாவிடமிருந்து வாய்மூல அறிக்கையைப் பெறுவதிலும் அவர்கள் கால இழுத்தடிப்புச் செய்ததாகவும் இம்மரண விசாரணை நியாயமாக நடைபெற்று குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டுமென்றும் ஊடகங்களே இவ்விடயத்தை உரிய உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நீதியைப்பெற்றுத்தர வேண்டுமென்றும் தெரிவித்தனர்.


சாய்ந்தமருது பொலிஸ் நிலைய நீதிமன்ற உத்தியோகத்தர் எம்.எம்.எஸ். முபாரக் (PC88489) துரிதமாகச் செயற்பட்டு குறித்த கலந்தர்ஷா ஆதம்பாவா என்பவரின் மரணம் கொலையா? அல்லது இயற்கை மரணமா? அல்லது நோயினால் ஏற்பட்ட மரணமா? என்பதைக் கண்டறிய முன்னெடுத்த நடவடிக்கையின் பயனாக கல்முனை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஏ.ஆர்.எம்.கலீல் வைத்தியசாலைக்கு விஜயம் செய்து உடலைப்பார்வையிட்டதுடன், உடற்கூறு பரிசோதனைக்கு உத்தரவிட்டார். 


இதனடிப்படையில் உடற்கூறு பரிசோதனைக்காக ஜனாஸா அம்பாறை மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.


இம்மரணம் தொடர்பாக 20 வயதையுடைய சந்தேக நபரை இன்று சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளதுடன், மரணத்திற்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி கே.எஸ். மோகனவர்ண தலைமையிலான பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe