பாறுக் ஷிஹான்
பாடசாலை மாணவர்கள், இளைஞர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருட்களை விநியோகித்து வந்த ஆலா என்ற இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.
கடந்த திங்கட்கிழமை (4) இரவு விசேட தகவலொன்றினையடுத்து அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க வழிநடத்தலில் பொலிஸ் குழுவினர் மருதமுனை கடற்கரைப் பிரதேசத்தில் சிவில் உடையில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது, குறித்த ஆலா என்ற பறவையின் செல்லப்பெயரைக்கொண்ட 39 வயதுடைய முஹம்மது இஸ்மாயில் அஸ்மீர் இயற்பெயருடைய இளைஞனை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர்.
இவ்வாறு சுற்றி வளைக்கப்பட்ட இளைஞன் தடுமாறிய நிலையில், அருகிலுள்ள கடலில் பாய்ந்து தப்பிச் செல்ல முயற்சித்தார்.
இந்நிலையில், நீச்சல் தெரியாது திணறிய ஆலா என்ற இளைஞனைக்கைது செய்த பொலிஸ் குழு 100 கிராம் கஞ்சாவினை உடமையிலிருந்து மீட்டுள்ளது.
பின்னர் மறுநாள் செவ்வாயக்கிழமை (5) சட்ட நடவடிக்கைக்காக கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ந்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.