Ads Area

ஹட்டன் ஜும்ஆப் பள்ளிவாசல் பாதுகாப்பு ஊழியர் கொலை : 10 நாட்களின் பின்னர் சந்தேக நபர் சம்மாந்துறையில் கைது.

  


பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)


ஹட்டன் ஜும்ஆப் பள்ளிவாசல் பாதுகாப்பு ஊழியரைக் கொலை செய்து அங்கு கொள்ளையடித்து தப்பிச் சென்ற சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


கடந்த டிசம்பர் மாதம் 9 ஆந்திகதி சனிக்கிழமை குறித்த கொலைச்சம்பவம் அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன், ஹட்டன் ஜும்ஆப் பள்ளிவாசலின் பாதுகாப்பு ஊழியராகக் கடமையாற்றிய  ஹட்டன், ஹிஜிரபுர பகுதியைச்சேர்ந்த 67 வயதுடைய சி.எம்.இப்ராஹிம் என்பவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் பள்ளிவாசலிலிருந்த ஊண்டியலும் உடைக்கப்பட்டு பணம் களவாடப்பட்டிருந்தது.


சந்தேக நபர் பள்ளிக்குள் வருவது, உண்டியலை உடைப்பது போன்ற காட்சிகள் சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளதுடன், கைது செய்வதற்கான விசாரணை  தேடுதல் வேட்டையில் ஹட்டன் பொலிஸார் ஈடுபட்டிருந்த நிலையில், 10 நாட்களின் பின்னர் சந்தேக நபர் முகைதீன் பாவா லாபீர் (வயது-45) சம்மாந்துறை பொலிஸாரினால்  செவ்வாய்க்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.


குறித்த கைதான சந்தேக நபருக்கு சாய்ந்தமருது, பொத்துவில், ஹற்றன், பொலிஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை தொடர்பாக முறைப்பாடுகள் உள்ளதாக பொலிஸ் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.


சந்தேக நபர் கடந்த  27.01.2022 அன்று அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பிரதேசத்தில் மூதாட்டி ஒருவர்  கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்காக மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 3 மாதங்களுக்கு முன்னர் தப்பிச் சென்றிருந்தார். 


இவ்வாறு தப்பிச்சென்ற சந்தேக நபர் பல குற்றச்சம்பவங்களுடன் தொடர்புடையவர் என  பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரிய வந்திருந்தது.


இதனையடுத்து சந்தேக நபர் தப்பிச்சென்ற சம்பவம் தொடர்பில் 5 க்கும் மேற்பட்ட சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளக விசாரணைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.


இவ்வாறான நிலையில் தப்பிச்சென்று தலைமறைவாகியிருந்த குறித்த சந்தேக நபர் ஹட்டன் ஜும்ஆப்பள்ளிவாசல் பாதுகாப்பு ஊழியரை கடந்த 10 நாட்களுக்கு முன்னர் கொலை செய்து, அங்கு கொள்ளையடித்து தலைமறைவாகி இருந்துள்ளார்.


இந்நிலையில், அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜயலத் வழிகாட்டலில் பெருங்குற்றப்பிரிவுப் பொறுப்பதிகாரி  கே.சதீஷ்கர் தலைமையிலான பொலிஸ் குழுவினர்    சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe