Ads Area

மத்ரஸா மாணவன் மரணம் : சிசிடிவி தொழிநுட்பவியலாளரின் வாக்குமூலம்.



பாறுக் ஷிஹான் 


மௌலவி அடிக்கடி தொலைபேசி எடுத்து அழித்த சிசிடிவி காணொளிகளை மீண்டும் எடுக்க முடியுமா? எனக்கேள்வி கேட்ட வண்ணமிருந்தார் என சிசிடிவி தொழிநுட்பவியலாளர் தெரிவித்தார்.


சம்பவ தினமன்று இரவு 7 மணியளவில் மௌலவி பதற்றத்துடன் சிசிடிவி தொழிநுட்பவியலாளரான எனக்கு தொலைபேசியூடாக அழைப்பெடுத்து உடனடியாக மத்ரஸாவிற்கு வந்து எல்லாவற்றையும் வன்பொருள் (HARD DISK) அழிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.


அதற்கு நான் என்னால் வர முடியாதென மௌலவியிடம் கூறி விட்டேன். அத்துடன், வன்பொருள் (HARD DISK) ஏன் அவற்றை அழிக்க வேண்டுமெனக் கேட்டதற்கு அவர் ஒன்றுமே சொல்லவில்லை.


பின்னர் எனது சகோதரரின் தொலைபேசி இலக்கத்தை அனுப்பி அவரைத்தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டேன். பின்னர் இரவு 11 மணியளவில் மாணவன் இறந்த பின்னர் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது. அந்த வேளை, எனது சகோதரர் நாங்கள் சிசிடிவி பரிசோதனை மேற்கொண்ட மத்ரஸாவில் மாணவன் மரணமாகியுள்ளதாக என்னிடம் குறிப்பிட்டார்.


நான் அவரிடம் அங்கு என்ன செய்தீர்கள் என சகோதரரைக் கேட்டேன். அப்பாடசாலையில் சிசிடிவி வன்பொருள் (HARD DISK) காணொளிகளை அழிக்குமாறு மௌலவி கேட்டதுடன், வன்பொருளை (HARD DISK) அங்கிருந்து அகற்றிச் செல்லுமாறு பதற்றத்துடன் கூறினார்.


அத்துடன், 1000 ரூபா காசும் கொடுத்து 3 நாளைக்கு பின்னர் வன்பொருள் (HARD DISK) வந்து பொருத்தித் தருமாறும் எனது சகோதரரிடம் மௌலவி கூறியுருக்கிறார்.


அத்துடன், சம்பவம் இடம்பெற்று பதற்றம் நீடித்திருக்கின்ற நிலையில், மௌலவி அடிக்கடி தொலைபேசி எடுத்து அழித்த சிசிடிவி காணொளிகளை மீண்டும் எனடுக்க முடியுமா? எனக்கேள்வி கேட்ட வண்ணமிருந்தார்.


செய்திப்பின்னணி-


13 வயது சிறுவன் சடலமாக மீட்பு - குர்ஆன் மதரஸா நிர்வாகி கைது - சாய்ந்தமருது பகுதியில் சம்பவம் 


13 வயது மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் மலசல கூடத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது சந்தை வீதியில் அமைந்துள்ள 3 மாடிக்கட்டடமொன்றில் நடாத்தப்படும் மற்றஸாவொன்றில் இன்று (5) இரவு  மட்டக்களப்பு மாவட்டம், காத்தான்குடிப்பகுதியைச்  சேர்ந்த எம்.எஸ்.முஸ்அப் (வயது-13) எனும் கல்வி கற்று வந்த மாணவனே தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். 


மத்ரஸாவில் மஹ்ரீப் தொழுகைக்கு ஏனைய மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில், மரணமடைந்த மாணவன் அங்கு காணப்படாததன் காரணமாக சில மாணவர்கள் தேடிய நிலையில் மலசல கூடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அம்மாணவன் மீட்கப்பட்டு சாய்ந்தமருது பிரதேச  வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதே வேளை, மரணமடைந்த மாணவனின் பெற்றோர், உறவினர்கள் தூக்கில் தொங்குவதற்கு எமது பிள்ளை கோழையல்ல எனவும், ஏதோவொன்று நடைபெற்றுள்ளதை ஊகிக்க முடிவதாகவும் முறையான விசாரணை அவசியமெனக் கேட்டுக்கொண்டனர்.


இதனையடுத்து மத்ரஸா மாணவனின் மரணத்தில் சந்தேகம் எனக்குறித்த மத்ரஸாவினை சுற்றி பொதுமக்கள் குவிந்தமையினால் சாய்ந்தமருது பொலிஸ் பொறுப்பதிகாரி சம்சுதீன் தலைமையிலான பொலிஸார் சம்பவ இடத்திற்குச்சென்று நிலமையைக் கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தனர்.


மேலும், குறித்த மாணவனின் மரணத்தில் சந்தேகமிருப்பதாக பொதுமக்கள் ஒன்றுகூடி குறிப்பிட்ட மதர்ஸாவின் நிர்வாகி மீது தாக்குதல் மேற்கொள்ளத்தயாரான வேளை, மேலதிக பொலிஸார் அவ்விடத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில்  சாய்ந்தமருது பொலிஸாரால் மதரஸா நிர்வாகியாகிய மௌலவி கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார்.


இது தவிர, குறிப்பிட்ட மதர்ஸாவின் நிர்வாகி மீது ஏற்கனவே பல பொலிஸ் முறைப்பாடுகள் இருப்பதாகவும் மாணவனின் மரணம் தற்கொலையல்ல  எனக்கூறி  பொதுமக்கள் குழப்பத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.


இதே வேளை, அம்பாறை மாவட்டம், கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 15 வயது சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண் கடந்த சனிக்கிழமை (2) அன்று சந்தேகத்தில் கல்முனை தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe