Ads Area

வவுனியா மாவட்டத்தில் 21 எச்.ஐ.வி தொற்றாளர்கள்: இவ்வருடம் 2 புதிய தொற்றாளர் அடையாளம்.

வவுனியா மாவட்டத்தில் 21 எச்.ஐ.வி தொற்றாளர்கள்: இவ்வருடம் 2 புதிய தொற்றாளர் அடையாளம் என்கிறார் வைத்திய கலாநிதி திருமதி அருள்மொழி பாஸ்கரன்


வவுனியா மாவட்டத்தில் 21 எச்.ஐ.வி தொற்றாளர்கள் உள்ளனர். அத்துடன் இவ்வருடம் 2 புதிய தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என வவுனியா பொது வைத்தியசாலையின் பாலியல் நோய் தடுப்பு பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி திருமதி அருள்மொழி பாஸ்கரன் தெரிவித்துள்ளார். 


சர்வதேச எய்ட்ஸ் தினமான இன்று (01.12) வவுனியா பொது வைத்தியசாலையில் பாலியல் நோய் தடுப்பு பிரிவில் இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், 


''சமூகத்தை வலுப்படுத்துவோம்- எய்ட்ஸ் தடுப்போம்'' எனும் தொனிப்பொருளில் பொருளில் 35 ஆவது எய்ட்ஸ் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. எய்ட்ஸ்க்கு எதிரான போராட்டம் வெற்றி பெறுவதற்கு சமூகத்தினரது ஒத்துழைப்பு மிகவும் இன்றியமையாததாக காணப்படுகின்றது.  எச்.ஐ.வியினால் பாதிக்கப்பட்டவர்களாக அதிக அளவில்  ஓரினச்சேர்க்கையாளர்கள், திருநங்கைகள், போதைவஸ்து பாவனையாளர்கள், விபச்சாரத்தில் ஈடுபடுவோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 


அவர்கள் தகுந்த சிகிச்சை எடுப்பது மற்றும் இந்நோய் பரவலை தடுப்பதாலும், சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமுமே 2030 ஆம் ஆண்டில் எய்ட்ஸ் நோயை இல்லாது ஒழிக்க முடியும். அந்த மகத்தான இலக்கை நோக்கி  பயணிக்க வேண்டும்.


இதுவரை இலங்கையில் தொற்று நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளவர்கள் 5496 பேர் ஆவார். அவர்களில் இவ்வருடம் செப்ரெம்பர் மாதம் வரை 485 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள்.  புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 

 

இதேவேளை, 2022 ஆம் ஆண்டு 607 புதிய எச்.ஐ.வி நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். இவர்களில் 88 வீதத்தினர் ஆண்களாவர். இது 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 48 வீதம் அதிகரித்து காணப்படுகின்றது.


இலங்கை எச்.ஐ.வி நோய் பரவல் குறைந்த நாடாகவே கருதப்படுகின்றது. இங்குள்ள சனத்தொகை அடிப்படையில்  0.1 வீதத்துக்கு குறைவானவர்களே தொற்றுக்கு உட்பட்டவர்களாக இருக்கின்றார்கள்.  இதில் 86 விதமான எச்.ஐ.வி தொற்று பாதுகாப்பற்ற உடலுறவின் மூலம் ஏற்படுகின்றது. ஓரினச்சேர்க்கையாளர்கள் கூடிய அளவில் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அவர்கள் குறிப்பாக 52 வீதமாக காணப்படுகின்றார்கள். 


இலங்கையில் 2018 இல் இருந்து  15 வயதிலிருந்து 24 வயதுக்குட்பட்ட இள வயதினருக்கும் எச்.ஐ.வி தொற்று காணப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு சுமார் 73 பேர் புதிய தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இதில் 66 பேர் ஆண்களாக காணப்படுகின்றனர்.

 

வவுனியா மாவட்டத்தை பொறுத்தவரையில் 2002 ஆம் ஆண்டு முதல் 33 எச்.ஐ.வி தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள். அவர்களில் 19 ஆண்களும் 13 பெண்களும் அடங்குகின்றனர். இதில் 12 பேர் இறந்துள்ளார்கள். தற்போது வவுனியாவில் 21 எச்.ஐ.வி தொற்றாளர்கள் சிகிச்சை சுகதேகிகளாக உள்ளனர். இவர்களில் 12 ஆண்களும், 09 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவ்வருடம் 2 பேர் அடையாளங்கள் காணப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் இருவரும் ஆண்களாக காணப்படுகின்றனர். இருவருமே ஓரினச்சேர்க்கையாளர்கள். 


2030ல் எயிட்ஸ் முடிவுக்கு கொண்டுவரும் மகத்தான இலக்கை நோக்கிய முதலாவது படியாக எச்.ஐ.வி பரிசோதனை உள்ளது. இந்த பரிசோதனையை இலங்கையில் உள்ள அனைத்து எஸ்டிடி சிகிச்சை நிலையங்களிலும் இலவசமாக செய்ய முடியும். அதன் முடிவுகள் இரகசியமாகவும் பேணப்படும் எனவும் தெரிவித்தார்.


Thanks - tnn news.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe