பாறுக் ஷிஹான்.
30 கணித, விஞ்ஞான மாணவர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவுடன் புலமைப்பரிசில் திட்டமொன்றினை இவ்வருடம் முதல் அமுல்படுத்த உத்தேசித்துள்ளதாக கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம்.நசீர் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பகுதியிலுள்ள கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் பிரதான அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (23) இரவு விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது,
கிழக்கு நட்புறவு ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டு 30 வருட நிறைவை முன்னிட்டு 30 கணித, விஞ்ஞான மாணவர்களுக்கு தலா 5,000 ரூபா கொடுப்பனவுடன் புலமைப்பரிசில் திட்டமொன்றினை இவ்வருடம் முதல் அமுல்படுத்த உத்தேசித்துள்ளோம். அதற்கான திட்டம் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் இத்திட்டம் ஆரம்பமாகும். இதில் ஸாஹிரா தேசிய பாடசாலை, மஹ்மூத் பாலிகா பெண்கள் பாடசாலை மாணவர்கள் எவ்வித பாகுபாடுமின்றி உள்வாங்கப்படுவார்கள்.
இதை விட அடுத்த வருடங்களில் ஏனைய பாடசாலை மாணவர்களையும் உள்வாங்கத் தீர்மானித்துள்ளோம். காரைதீவு, நிந்தவூர், மருதமுனை, கல்முனை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள மாணவர்களும் எதிர்காலங்களில் இத்திட்டங்களில் உள்வாங்கப்படுவார்கள்.
அடுத்த திட்டமாக வயதான மற்றும் ஊனமுற்ற இளைஞர்களுக்கான உபகரணங்களை இவ்வருடத்தினுள் வழங்கத் தீர்மானித்துள்ளோம்.
இதில் 30 பேர் உள்வாங்கப்படுவார்கள்.
அடுத்த திட்டமாக 30 பேருக்கு இலவச குடி நீரிணைப்பும் 30 பேருக்கு மின்சார இணைப்பினையும் இவ்வருடம் பெற்றுக்கொடுக்கத் தீர்மானங்களை எடுத்திருக்கிறோம். இத்திட்டம் 2 வருடத்திற்கு முன்னர் எமது அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்டதுடன், 124 நீரிணைப்பினை இத்திட்டத்தினால் நிறைவு செய்து கொடுத்திருக்கின்றோம்.
இவ்விசேட செய்தியாளர் சந்திப்பில் கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம்.நசீர், கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் பிரதித்தவிசாளர் எம்.யுனைதீன் (மான்குட்டி), நிதிப்பணிப்பாளர் முன்னாள் சாய்ந்தமது பிரதேச செயலாளர் ஏ.எல்.எ.சலீம், நிர்வாகப்பணிப்பாளர் தபாலதிபர் யூ.எல்.எம்.பைசர் உள்ளிட்ட கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.