புனித ரமழான் மாத நோன்பு ஆரம்பிப்பதற்கு முன்பு நல்லெண்ண நடவடிக்கையாக, அமீரகத்தைச் சேர்ந்த இந்திய தொழில் அதிபர் ஒருவர். ஐக்கிய அரபு அமீரக சிறைகளில் இருந்து 900 கைதிகளை விடுவிக்க அதிகாரிகளிடம் 10 லட்சம் திர்ஹாம் ( சுமார்ரூ.2.50 கோடி ) நன்கொடை அளித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்திய தொழிலதிபர் பிரோஸ் மெர்ச்சண்ட் (வயது 66) பூயர் கோல்ட் நகைக்கடையின் உரிமையாளர் ஆவார். இவர் 'தி பர்காட்டன் சொசைட்டி' என்ற தொண்டு நிறுவனம் மூலம் நல்ல காரியங்களும் செய்து வருகிறார். கருணை உள்ளம் படைத்த இவர், வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான கைதிகள் விடுதலையாகி சொந்த ஊர் செல்ல உதவி வருகிறார்..
அப்படித்தான் பிரோஸ் மெர்ச்சண்ட் , ரம்ஜான் பண்டிகைக்கு முந்தைய நல்லெண்ண நடவடிக்கையாக, 900 கைதிகளை விடுவிக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகளுக்கு 10 லட்சம் திர்ஹாம் நன்கொடையாக வழங்கினார். இது தொடர்பாக அவரது அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், இது புனித மாதத்தின் பணிவு, மனிதாபிமானம், மன்னிப்பு மற்றும் கருணை ஆகியவற்றுக்கான உதாரணம். அமீரகம் முழுவதும் உள்ள சிறைகளில் உள்ள 900 கைதிகளை விடுவிக்க பியூர் கோல்ட் நிறுவனம் சுமார் 2.25 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளது" என்று அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டு 'தி பர்காட்டன் சொசைட்டி' என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் பிரோஸ் மெர்ச்சண்ட் ,, 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அமீரகம் முழுவதும் 900 கைதிகளை விடுதலை செய்வதில் ஏற்கனவே முக்கியப் பங்கு வகித்துள்ளார். குறிப்பாக அஜ்மானைச் சேர்ந்த 495 கைதிகள், புஜைராவிலிருந்து 170 கைதிகள், துபாயில் இருந்து 121 கைதிகள், உம்முல் குவைனில் இருந்து 69 கைதிகள் மற்றும் ர் ராஸ் அல் கைமாவிலிருந்து 28 கைதிகளை விடுவிக்க முக்கிய பங்கு வகித்துள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் உள்ள காவல்துறை இயக்குநர் ஜெனரல்களுடன் இணைந்து, பிரோஸ் மெர்ச்சண்ட் ஏற்கனவே பல ஆண்டுகளாக பல்வேறு மதம் மற்றும் நாடுகளைச் சேர்ந்த 20,000 கைதிகள் விடுதலை பெற்று தங்கள் குடும்பத்துடன் வாழ முக்கிய பங்கு வகித்துள்ளார்.
சிறையில் வாடியவர்களின் கடன்களை அடைத்து அவர்களைசொந்த நாட்டிற்கு திரும்ப விமான டிக்கெட்டுகளுக்கான நிதியையும் பிரோஸ் மெர்ச்சண்ட் வழங்கி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். சகிப்புத்தன்மைக்கு அமீரகம் அளிக்கும் முன்னுரிமையை மனதில் வைத்து, அவர்கள் தங்கள் குடும்பங்களுடன் மீண்டும் இணைவதற்கான இரண்டாவது வாய்ப்பை வழங்குவதற்காக இந்த பணியைத் தொடங்கியதாக பிரோஸ் மெர்ச்சண்ட் கூறினார். 2024 ஆம் ஆண்டில் 3,000 க்கும் மேற்பட்ட கைதிகளை விடுதலை செய்ய வைக்க வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் அவர் கூறினார். இந்திய தொழிலாதிபரின் இந்த உதவிக் கரம் அமீரக ஆட்சியாளர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, மேலும் அவரது கருணை, மன்னிப்பு மற்றும் தாராள மனப்பான்மை ஆகியவை அமீரகம் முழுவதிலும் உள்ள அதிகாரிகளை நெகிழ வைத்துள்ளது. இதுபற்றி பிரோஸ் மெர்ச்சண்ட் கூறுகையில், இந்த விவகாரத்தில் அமீரக அரசு அதிகாரிகளுடன் இணைந்திருப்பதில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. மனிதநேயம் தேசம் போன்ற எல்லைகளைத் தாண்டிய ஒன்று. சிறையில் வாடும் ஏழை கைதிகளை அவர்களது சொந்த நாட்டிலும் சமுதாயத்திலும் அவர்களது குடும்பத்துடன் சமரசம் செய்வதற்கான வாய்ப்பை அவர்களுக்கு வழங்க நாங்கள் ஒன்றாகச் செயல்படுகிறோம் என்று கூறினார்.