பாறுக் ஷிஹான்.
திடீர் காலநிலை மாற்றம் காரணமாக அதிகளவான கணையான் மீன் இனங்கள் அம்பாறை மாவட்ட ஆற்றோரங்களில் பிடிபடுகின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக கடலை நோக்கி ஓடும் நீரோடைகள் ஆறுகளிலிருந்து 3 வகையான கணையான் வகை மீன்கள் கரைவலைகள், கட்டுவலைகள், தூண்டில்கள் மூலம் பிடிக்கப்பட்டு பல ஆயிரம் ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
சுமார் 5 முதல் 25 கிலோ எடையுள்ள பாரிய கணையான் மீன் இனங்களே இவ்வாறு மீனவர்கள் பிடித்து வருகின்றனர்.
இவ்வகையான மீன்கள் ரூபா 1,000 முதல் 9 ஆயிரம் வரை விற்பனையாகி வருவதுடன், பொதுமக்களும் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருகின்றனர்.
குறிப்பாக, அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, நிந்தவூர், பாலமுனை,அட்டாளைச்சேனைப் பகுதிகளில் இவ்வாறான மீன் வகைகள் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை, மீனவர்கள் பிடிக்கப்படும் கணையான் மீன்களை பால் கணையான், செங்கணையான், முள்கணையான் என வகைப்படுத்தி விற்பனை செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.