பாறுக் ஷிஹான்.
குரங்குகளின் தொல்லையால் நகர வர்த்தகர்கள், விவசாயிகள், பாதசாரிகள் பெரும் சிரமங்களை தினந்தோறும் முகங்கொடுத்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
தினமும் கொத்தணியாக 300இற்கும் மேற்பட்ட குரங்குகள் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடமாடி வருவதுடன், இவ்வாறு அதிகரித்து வருகின்ற குரங்குகளின் தொல்லையைக் கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் பொதுமக்களினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் சவளக்கடை, நாவிதன்வெளி, நற்பிட்டிமுனை, மருதமுனை, சேனைக்குடியிருப்பு, மணல்சேனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை, மத்திய முகாம், சொறிக்கல்முனை, சம்மாந்துறை, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அட்டப்பளம், ஒலுவில், வளத்தாபிட்டி, அக்கரைப்பற்று, தம்பிலுவில், பொத்துவில், இறக்காமம் பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களில் விதைப்பு மேற்கொள்ளப்பட்ட நெல்லைச் சேதப்படுத்துவதும் வியாபார நிலையங்களில் காட்சிப்படுத்தபட்டுள்ள பொருட்களை நாசப்படுத்தி விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பழங்களையும் உண்டு வீணாக்குவதாகவும் குற்றச்சாட்டுக்கள் அடுக்கடுக்காக முன்வைக்கப்படுகின்றன.
இது தவிர, இம்மாவட்டத்தில் வீதிகளில் செல்கின்ற பாதசாரிகள், வாகனங்களின் போக்குவரத்தினை குரங்கு கூட்டங்களாக வீதியின் நடுவில் சஞ்சாரம் செய்து தடுத்து வருகின்றன. இதனால் பல விபத்துக்களும் ஏற்பட்டுள்ளன.
மேலும், இப்பிரதேச மக்கள் பொருட்களை எடுத்துச்செல்லும் போது கைகளிலுள்ள உணவுப் பொதிகளை பிடுங்குவதாகவும் இதன் காரணமாக இப்பகுதி மக்கள் பல இடர்களைச்சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதே வேளை, குரங்குகளின் அட்டகாசத்தால் பல பகுதிகளிலுள்ள மாணவர்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் கல்வியைத்தொடர்ந்து வருகின்றனர்.
அத்தோடு, வீடுகளில் உடைகளை வெளியில் உலர விடும் சந்தர்ப்பத்தில் குரங்குகள் அவற்றைக் கொண்டு செல்வதால் பாடசாலை மாணவர்கள் உட்பட வீட்டிலுள்ள பெரியவர்களும் பல பிரச்சினைகளை எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அம்பாறை மாவட்டத்தின் உகண, தமன பொலிஸ் பிரிவுகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் மற்றும் பேரூந்துகளில் ஏறி குரங்குகள் அட்டகாசம் செய்வதனால் வாகனச்சாரதிகள் மற்றும் பயணிகளும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
அம்பாறை மாவட்ட புறநகரங்களை அண்டிய மலைப்பிரதேசங்களில் மலைப்பாங்கான இடங்களில் காணப்படும் குரங்குகள் அடிக்கடி ஊருக்குள் வந்து தொல்லை கொடுப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு குரங்குகளின் தொல்லையால் நகர வர்த்தகர்கள், விவசாயிகள் பாதசாரிகள் பெரும் சிரமங்களை தினந்தோறும் முகங்கொடுத்து வருவதுடன், 300இற்கும் மேற்பட்ட குரங்குகள் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடமாடுகின்றது.
இவ்வாறு அதிகரித்து வருகின்ற குரங்குகளின் தொல்லையைக் கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கையெடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், இம்மாவட்டத்தில் குரங்குகளின் தொடர் அட்டகாசத்தால் பொறுமை இழந்த பல விவசாயிகள் விவசாயத்தை கைவிட்ட சந்தர்ப்பமும் உள்ளன.
மேலும், ஒவ்வொரு வருடமும் நேரடியாகவும் மறைமுகமாகவும் மில்லியன் கணக்கான ரூபாய் குரங்குகளினால் வீணாவதுடன், பல விவசாய நிலங்கள் குரங்குகளின் நடமாட்டம் தொல்லை காரணமாக தரிசாக மாறியுள்ளது.
இங்கு குரங்குகள் விவசாய நிலங்களிலுள்ள பயிர்களை உண்பதுடன், அதை முழுவதுமாக வீணாக்குவதும் இதற்குப்பிரதான காரணமாகும்.
அதுமாத்திரமன்றி, நகரங்களில் முறையாக அகற்றப்படாத திண்மக்கழிவுகளை உண்டு அதிக எண்ணிக்கையில் குரங்குகள் பெருகி வருவதுடன், இதனால் விவசாய நிலத்தைப்பாதுகாப்பது சிரமமாக உள்ளதால் சில விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளை கைவிட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் பொதுவாக மலைப்பிரதேசங்களில் மலைப்பாங்கான இடங்களில் காணப்படும் குரங்குகள் ஊருக்குள் வந்து செல்வதுடன், வீதியோரங்களில் மட்டுமல்லாமல், சில சமயம் ஊருக்குள்ளும் வந்து விடுகின்றன.
இப்பகுதி மக்களின் பாதுகாப்பு நலன்கருதி பொலிஸ் நிலையம் மற்றும் வன அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

.jpeg)