Ads Area

ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தப்போராட்டம் : தென்கிழக்கு பல்கலைக்கழக நடவடிக்கைகள் ஸ்தம்பிதம்.

 நூருல் ஹுதா உமர்.


பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள், நிருவாக உத்தியோகத்தர்கள் சங்கங்கள், கல்விசார் ஆதரவு சங்கங்கள் மற்றும் அரசியல் சங்கங்களின் கூட்டுக் குழுவின் ஏகமனதான தீர்மானத்தின் அடிப்படையில், நேற்று 12.03.2024 நண்பகல் 12.00 மணியிலிருந்து இன்று புதன்கிழமை 13.03.2024ம் திகதி வரை தொடர்ச்சியான ஒன்றரை நாட்கள் அடையாள வேலை நிறுத்தம் நாட்டிலுள்ள சகல பல்கலைக்கழகங்களிலும் மேற்கொள்ளப்படுகின்றன.


குறித்த திடீர் வேலைநிறுத்தப்போராட்டம் தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலும் கல்விசார ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் எம்.ரி.எம்.தாஜுடீன் அவர்களது தலைமையிலும் தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் செயலாளர் எம்.எம்.முகமது காமிலின் வழிகாட்டலிலும் இடம்பெறுகின்றன.


நாட்டின் கடுமையான பொருளாதார நெருக்கடியால் சடுதியாக அதிகரித்துள்ள வாழ்க்கைச்செலவினை ஈடுசெய்ய முடியாத நிலையில் எமது நீண்டகால சம்பள முரண்பாடுகளைச் சீர்செய்ய விடுக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்ந்தும் உதாசீனம் செய்யப்படுவதை வெளிக்கொணருமுகமாகவும் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலுமுள்ள கல்விசாரா ஊழியர்கள் மேற்குறித்த இவ்வொன்றரை நாட்கள் தொடர்ச்சியான அடையாளப் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொள்கின்றனர்.


மேற்குறித்த அடையாள வேலை நிறுத்தத்தில் அனைத்து விதமான சேவை வழங்கும் உத்தியோகத்தர்களும் தங்களது கடமைகளிலிருந்து விலகி இருக்குமாறும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் கடமை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவசியமான அல்லது அவசியம் எனக்கருதும் இடங்களில் மாத்திரம் தங்களது சேவையை வழங்க முடியுமென்பதுடன் குறித்த கடமையின் நிமித்தம் சீருடைகளை அணியாது சாதாரண உடையில் (Casual Dress) கடமையாற்றவுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.


அதேவேளை, அனைத்துவிதமான அத்தியாவசிய சேவைகள், சாரதிகள், மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் பகுதியில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் அனைவரும் தங்களது கடமைகளிலிருந்து பூரணமாக விலகி இருத்தல் வேண்டுமென்றும் கோரப்பட்டுள்ளது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe