பாறுக் ஷிஹான்.
வட கிழக்கு பிரிவில் வைத்தே நாம் தீர்வினைத்தேட வேண்டும். வடக்கு, கிழக்கு இணைப்பென்பது தெளிவான பிணைப்பல்ல என புதிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியத்தலைவர் முஸம்மில் அபூசாலி குறிப்பிட்டார்.
அம்பாறை மாவட்டம், கல்முனையில் அமைந்துள்ள புதிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் இன்று (13) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது,
இன்று சமூகத்தில் பல்வேறுபட்ட கட்சிகள் காணப்படுகின்றன. ஒரு பலமான கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி காணப்பட்டது. இன்று அக்கட்சி பல்வேறு தளம்பல் நிலையிலுள்ளது. தற்போதுள்ள எதிர்காலச்சந்ததியினர் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியை நம்பக்கூடிய நிலையில் அதன் பயணங்கள் அமையவில்லை. மறைந்த தலைவர் மர்ஹூம் அஸ்ரப் அவர்களுக்குப் பின்னால் முஸ்லீம் சமூகம் அதன் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதில் தவறியுள்ளது.
அந்த நிலைமை மாறி நாங்கள் எமது உரிமைகளையும் நம் சமூக கட்டமைப்புக்களையும் பாதுகாத்துக் கொண்டு சரியான அரசியலை நாம் மேற்கொள்ள வேண்டுமென்பதற்காக எமது புதிய ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் ஆரம்பமும் முடிவும் அமைந்திருக்கும்.
அது மாத்திரமன்றி, எதிர்காலங்களில் இளைஞர்களுக்கு சரியான அரசியலில் வழிகாட்ட வேண்டும். இந்த அரசியலினூடாக இளைஞர்கள் சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்கக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும்.
இலங்கையில் முஸ்லீம் சமூகம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றது. பொருளாதார, காணி, நிர்வாக ரீதியான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றார்கள்.
இப்பிரச்சினைகளுக்கான தீர்வாக எமது கட்சி அமையும். வடக்கு, கிழக்கு இணைப்பென்பது தெளிவான பிணைப்பல்ல. தமிழ்ப்பேசும் மக்கள் வாழ்ந்தாலும் மூன்று சமூகங்கள் மத ரீதியாக கலந்துள்ளோம். தற்போதிருக்கின்ற வட கிழக்கு பிரிவில் வைத்தே நாம் தீர்வினைத்தேட வேண்டுமென மேலும் அவர் கூறினார்.
குறித்த செய்தியாளர் சந்திப்பில் கட்சியின் சிரேஷ்ட ஆலோசகர் முபாறக் முப்தி, புதிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் இப்ராகீம் அமீர் மௌலவியும் கலந்து கொண்டிருந்தனர்.