தற்போது பலஸ்தீனின் காஸா பகுதிகளில் யுத்தத்தினால் பெருமளவான மக்களும் சிறுவர்களும் பாரிய பாதிப்புக்களுக்கு உள்ளாகி இருப்பதை முன்னிட்டு இலங்கை அரசாங்கம் காஸா சிறுவர்களுக்கு உதவி செய்வதற்கு கொள்கை ரீதியாக ஒரு தீர்மானம் எடுத்து ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டதற்கு இணங்க ஜனாதிபதி செயலகத்தினால் சகல சகல பள்ளிவாசல்களிலும் விளம்பரப்பலகையில் காட்சிப்படுத்தி குறித்த நிதியத்திற்கு நிதியை வழங்குமாறு கேட்டுக் கொண்டது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இச்சுற்று நிரூபத்துக்கமைய எமது சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் பராபரிப்பின் கீழுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் தனிநபர்கள் பொது அமைப்புக்களினால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ள தொகையை கையளிக்கும் நிகழ்வு இன்று (28) ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு சம்மாந்துறை பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.
இதற்கு அமைவாக எமது சம்மாந்துறை பிராந்தியத்தினால் சேகரிக்கப்பட்ட நிதி ரூபாய் 4,543,405.00 (நாற்பத்தைந்து லட்சத்து நாற்பத்து மூன்றாயிரத்து நானூற்று ஐந்து ரூபாய்) நிதி பணத்தொகையினை சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையினால் , முஸ்லிம் கலாச்சார திணைக்களத்தின் அம்பாரை மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் அஷ்ஷெய்க். ஏ. சுபைதீன் (மன்பஹீ) மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலக முஸ்லிம் கலாச்சார உத்தியோகத்தர் ஏ.எம். ஆரிப் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது சம்மாந்துறை முற்-சபைகளினதும் தலைவர் உட்பட நிருவாக உறுப்பினர்களும் , சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் பராமரிப்பில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களும் சமூகமளித்திருந்தனர். நிகழ்வு துஆ பிரார்த்தனையுடன் நிறைவுக்கு வந்தது.
நன்றி - சம்மாந்துறை TREND