Ads Area

அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவுகள்- 8 உணவகங்களுக்கெதிராக சட்டநடவடிக்கை.

 பாறுக் ஷிஹான்.


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீனின்  அறிவுறுத்தலுக்கமைய, பிராந்திய சுற்றுச்சூழல் தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவுப்பாதுகாப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி ஏ.எஸ்.எம்.பெளசாத் பங்களிப்புடன் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் உணவு கையாளும் நிறுவனங்கள் திடீர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.


அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களின் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களினால் அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவு நிலையங்களில் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவுகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன. 


குறித்த தினம் 65 உணவு கையாளும் நிறுவனங்கள் சோதனை செய்யப்பட்டு அதில் 8 நிறுவனங்களுக்கெதிராக சட்டநடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், வர்த்தகர்கள் மற்றும் உணவக உரிமையாளர்களுக்கு அறிவுரை, ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. 


இதில், அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி எப்.எம்.ஏ.காதர், அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எல்.இஸ்மாயில் உட்பட சிரேஷ்ட பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், பிராந்திய சுற்றுச்சூழல் தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவுப்பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe