பாறுக் ஷிஹான்.
மாவடிப்பள்ளி பாலத்திற்கருகில் முதலைகள் பல இறந்து கரையொதுங்கி வருகின்றன.
அம்பாறை மாவட்டம், காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளிப்பாலம் அருகில் அண்மைக்காலமாக முதலைகள் பல இறந்த நிலையில் காணப்படுகின்றது.
இதனால் இப்பகுதியெங்கும் துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதியினால் பொதுமக்கள் சிரமத்துடன் பயணம் செய்வதை அவதானிக்க முடிகின்றது.
மேலும், இப்பாலத்தை அண்டிய பகுதிகளில் சுமார் 30க்கும் அதிகமான முதலைகள் காணப்பட்ட போதிலும், தற்போது 10 முதல் 15 வரையிலான முதலைகளே காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 7 அடி முதல் 8, 9 அடி முதலைகள் தற்போது இறந்த நிலையில் நீரில் மிதந்து காணப்படுகின்றன.
அத்துடன், குறித்த பாலத்தைச்சுற்றி சட்டவிரோதமாக குப்பைகளும் கொட்டப்பட்டுள்ளன.
இவ்வாறு முதலைகள் இறந்த நிலையில் காணப்படுவது குறித்து பல்வேறு சந்தேகங்களை பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.