சம்மாந்துறை வீரமுனை வரவேற்பு கோபுரம் சம்பந்தமாக முஸ்லிம் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக பிள்ளையான் களத்துக்கு வரக் கூடிய நிலையில் முஸ்லிம் எம்பீக்கள் கொண்ட கட்சித்தலைவர்கள் பூனைகள் போல் சுருட்டிக் கொண்டுள்ளனர் என ஸ்ரீலங்கா உலமா கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சம்மாந்துறை சம்பவங்கள் எலி கொழுத்து பூனையைப் பார்த்து அழைக்கும் நிலையை காட்டுகிறது. இவற்றுக்கு காரணம் சம்மாந்துறை எமது பேச்சை கேட்டு சொந்தக் காலில் நிற்காமல் விட்டமைதான் ஒரு காலத்தில் வீரம் என்றால் அதற்கு மறுபெயர் சம்மாந்துறை என்றிருந்தது.
கலவர காலங்களின்போது சம்மாந்துறை இளைஞர்களின் வீரம், தியாகம் வரலாற்று பதிவானது. துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் முன்பாக நெஞ்சு நிமிர்த்தி நின்ற ஊர்.
இப்போது முஸ்லிம் காங்கிரஸுக்கும், மக்கள் காங்கிரஸுக்கும் தேசிய காங்கிரஸுக்கும் அடிமைப்பட்டுப் போய் குத்துச்சண்டை வீரர் முஹம்மட் அலியின் கடைசி கால வாழ்க்கை போல் சம்மாந்துறை தள்ளாடுகிறது.
என்ன காரணம்?
சம்மாந்துறைக்கு வாப்பா (எம்பி) இல்லாத காரணமா?
அப்படி சொல்ல முடியாது.
கல்முனைக்கும் வாப்பா உள்ளார். என்ன பிரயோசனம்?
கல்முனை பஸாருக்கு செல்லும் வீதிகளை சட்டத்துக்கு முரணாக ஐந்து மணித்தியாலங்களுக்கு மறித்து முழு பஸாரின் வியாபாரத்தையும் முடக்கினர். ஏன்? வாப்பா இருந்தும் எதிர்க்கட்சிக்கு முட்டுக்கொடுக்கும் முஸ்லிம் காங்கிரஸில் இருப்பதால் வாப்பா, அதிகாரம் இல்லாத ஐ நா சபை போன்று இருக்கிறார்.
இதுதான் சம்மாந்துறையின் நிலையுமாகும்.
அம்மக்கள் ஹக்கீமையும் ரிசாதையும் நம்பிக் கொண்டிருந்ததால் பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு கருடனை பார்த்து சவுக்கியமா என கேட்பது போல் ரணில் அரசில் இருந்து கொண்டு பிள்ளையான் சம்மாந்துறை மக்களை பார்த்து சவுக்கியமா என எலி கொழுத்து பூனையை படுக்கைக்கு கூப்பிடுவது போல் சம்மாந்துறை மக்களை பார்த்து மத தீவிரவாதிகள் என்கிறார். இவர் ஏதோ காந்தியின் தொண்டர் என்ற நினைப்பு.
ஆகவே சம்மாந்துறை மக்களை எதிர்க்கட்சியிடம் விற்ற ஹக்கீமையும், ரிசாதையும் சம்மாந்துறை மக்கள் ஒதுக்கி சொந்தக் காலில் நிற்க முன்வரா விட்டால் இன்னும் பல அவமானங்களை சந்திக்க வேண்டி வரும் என உலமா கட்சி சொல்லிக்கொள்கிறது.
முபாறக் அப்துல் மஜீத்
தலைவர்
ஸ்ரீலங்கா உலமா கட்சி.