பாறுக் ஷிஹான்.
கடற்கரையில் பிளாஸ்டிக் குழாயொன்றில் கிறீஸ் திரவம் இட்டு புதைத்து வைக்கப்பட்டிருந்த ரிவோல்வர் ரக துப்பாக்கி மீட்கப்பட்டு கல்முனை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம், கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்தை அண்டிய கடற்கரைப்பகுதியில் கடலரிப்பினால் வெளியாகியுள்ள நிலையில், அங்கு விளையாட்டில் ஈடுபட்டவர்களால் கண்டெடுக்கப்பட்டு குறித்த துப்பாக்கி மீட்டு நேற்று செவ்வாய்க்கிழமை (23) மாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கி 2 தோட்டாக்களுடன் (ரிவோல்வர்) இயங்கு நிலையில் காணப்படுவதுடன், ஜேர்மனி நாட்டு தயாரிப்பென பொலிஸார் குறிப்பிட்டனர்.
மேலும், மீட்கப்பட்ட துப்பாக்கி தொடர்பில் எந்தவொரு சந்தேக நபர்களும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், மேலதிக விசாரணைகளை கல்முனை தலைமையக பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.