Ads Area

சஜீதின் ஆலோசனையில் ஆலய முன்றலில் பிக்குவின் சவம் எரிக்கப்பட்டது - செல்வராஜா கஜேந்திரன் எம்பி.

 பாறுக் ஷிஹான்.


தேர்தல் விஞ்ஞாபனத்தில் இது ஒரு பௌத்த நாடு. சிங்கள நாடு. இதைப் பேணிப்பாதுகாப்போம் என்று குறிப்பிட்டு, வட, கிழக்கில் 1,000 பௌத்த விகாரை அமைப்பதாகவே பேரினவாதிகள் 75 வருடங்களாக   கூறுகின்றனர்.


சஜீத் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனமும் அவ்வாறு தான் இருந்திருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.


எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தல் தொடர்பில் சனிக்கிழமை (24) அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்ட பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு  தெளிவூட்டும் துண்டுப்பிரசுரம் வழங்கும் செயற்பாட்டில் ஈடுபட்ட வேளை, ஊடகங்களிற்கு கருத்துத்தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


மேலும் தனது கருத்தில் குறிப்பிட்டதாவது,


75 வருடங்களாக தமிழருக்கு உரிமை வழங்கமாட்டோம் என்று பேரினவாதிகள் கூறி வருகின்றார்கள்.


குறிப்பாக, பேரினவாதிகள் சிங்கள மக்களுக்கு இவ்வாறாக கருத்துக்களைக்கூறி வருகின்றார்கள். அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இதுவொரு பௌத்த நாடு. சிங்கள நாடு. இதைப் பேணிப் பாதுகாப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.


அது மட்டுமன்றி, வட, கிழக்கில் 1,000 பௌத்த விகாரை அமைப்பதாகவே கூறி வருகின்றனர். சஜீத் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனமும் அவ்வாறு தான் இருந்திருக்கின்றது.


சஜீத் பிரேமதாச புத்தசாசன அமைச்சராக இருந்த போது நீராவியடி பிள்ளையார் ஆலய முற்றத்தில் ஒரு பௌத்த பிக்குவின் சவம் எரிக்கப்பட்டது. இவ்விடயம் அமைச்சரின் ஆலோசனை, வழிகாட்டலுடன் தான் நடைபெற்றது. இது தவிர, அவரது காலத்தில் தான் யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியில் சட்டவிரோத விகாரை கூட கட்டப்பட்டிருந்தது.


அனுர குமார திசாநாயக்கவைப்பற்றிக் கூறத்தேவையில்லை. மோசமான இனவெறி கொண்ட ஒருவர். இறுதிப்போரில் ஒன்றரை இலட்சம் தமிழர்களை அழித்திழிப்பதற்காக பல்லாயிரக்கணக்கான இளைஞர்களைத்திரட்டி இராணுவத்திற்கு கொடுத்திருந்த ஒரு கொலை வெறி பிடித்த குழுவொன்றின் தலைமைச்சக்தியாக அவர் இருக்கின்றார்.


அது மாத்திரமன்றி, வடக்கு, கிழக்கினை வழக்குத்தாக்கல் செய்து பிரித்த இனவெறியர்கள் இவர்கள். இவர்கள் எல்லோரது நிலைப்பாடுகளும் இவைகள் தான். 


இதில் நாமல் ராஜபக்ஸ விதிவிலக்கானவரல்லர். இதனால் தான் இவர்களிடம் தமிழருக்கு உரிமை கொடுக்கப்போகின்றோம் எனக்கூறினால், தேர்தல் விஞ்ஞாபனத்தில் எழுதி உங்களின் சிங்கள மக்களுக்குச் சொல்லுங்கள். இந்த தோல்வியடைந்த ஒற்றையாட்சியினை ஒழிக்கப்போகின்றோம். சமஸ்டியைக் கொண்டு வரப்போகின்றோம் என்பதை தேர்தல் விஞ்ஞாபனத்தினூடாக வெளிப்படுத்தி வாருங்கள் என நாங்கள் கூறுவது நம்பிக்கைக்காக தான்.


இது தவிர, இன்று நேற்று முளைத்த காளானாக இருக்கின்ற இந்த நாமல் ராஜபக்ஸவிற்கு சமீப காலமாக பல கருத்துக்களைக் குறிப்பிடும் துணிச்சலைக் கொடுத்தது சுமந்திரன், சம்பந்தன், அரியநேந்திரன், சிறிதரன் உட்பட இந்த தமிழரசுக்கட்சியின் வீட்டுச்சின்னத்தில் போட்டியிட்டு 2010, 2015, 2020ம் ஆண்டுகளில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழுப்பேரும் பொறுப்பேற்க வேண்டும்.


விக்னேஸ்வரனும் முழுப்பொறுப்பினையும் ஏற்க வேண்டும். ஏனெனில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு குற்றவியல் விசாரணைகளை நடாத்துவதற்கான அதிகாரங்களில்லை என்பது நன்றாகத்தெரிந்த பிற்பாடும் தொடர்ச்சியாக உள்ளக விசாரணைக்குள் பொறுப்புக்கூறலை முடக்கி சர்வதே விசாரணை வேண்டாம்.


இனப்படுகொலையாளிகளைப் பாதுகாப்பதற்காக மேற்கூறியவர்கள் ஒவ்வொருவரும் கூட்டாகச் செயற்பட்டு வந்தவர்கள். 


குறிப்பாக, இந்த இனப்படுகொலையாளி கோட்டபாய ராஜபக்ஸ 2019 ஆண்டு பதவியேற்ற பிற்பாடு ஜனாதிபதியாக இருக்கின்ற போது 2021 ஆண்டு மார்ச் மாதம் இலங்கை தொடர்பாக ஒரு தீர்மானம் வந்த நிலையில், அச்சந்தர்ப்பத்தில் வந்து பொறுப்புக்கூறல் செயற்பாட்டை மனித உரிமைப்பேரவையிலிருந்து வெளியே எடுத்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டுமென முயற்சியை எங்கள் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட எங்களது கட்சி முக்கியஸ்தர்கள் முன்னெடுக்கின்ற போது, தமிழரசுக்கட்சியினர் கடிதமெழுதி ஜெனீவா மனித உரிமைப்பேரவையில் கொண்டு வரப்படவுள்ள விடயம் எவ்வடிவத்திலேனும் நிறைவேற்றப்பட வேண்டும்.


ஏனெனில், இலங்கை தொடர்பில் ஜெனீவாவில் தீர்மானமொன்று தேவையென்பதாகும். இவ்வாறாக இவர்கள் கொடுத்த ஆதரவு தான் நாமல் ராஜபக்ஸ போன்றவர்களுக்கு இவ்வாறான திமிரைக் கொடுத்திருக்கின்றது.


அது மட்டுமன்றி, நாமல் ராஜபக்ஸ சீன சார்பானவர் என்பதனால் ஊடகங்கள் அவரது கருத்துக்களை பெரிதுபடுத்துகின்றன.


அது மட்டுமன்றி, 2010ம் ஆண்டு தமிழரசுக்கட்சியினர் சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்கச் சொன்னதை மறக்க முடியுமா?. ஆகவே, எமது மக்கள் இவ்வாறானவர்களை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.


1920ம் ஆண்டு முஸ்லீம்களுக்கெதிரான படுகொலையில் ஈடுபட்டமைக்காக பிரித்தானியாவில் வழக்கு போடப்பட்டிருந்தது. அவ்வழக்கில் இலங்கையிலிருந்து சென்ற தமிழ்த்தலைவர்கள் வாதாடி அச்சிங்களத் தலைவர்களை மீட்டுக்கொண்டு வந்த போது, அந்த நன்றிக்கடனுக்காக கொழும்பிற்கு வந்திறங்கிய தமிழ்த்தலைவர்களை குதிரை வண்டிலில் ஏற்றி குதிரைகளை கழற்றி விட்டு பண்டார நாயக்க உள்ளிட் சிங்களத்தலைவர்கள் குதிரைகள் போன்று தோளில் வைத்து வண்டிகளை இழுத்துச் சென்றார்கள். 


அந்தளவிற்கு தமிழர்களுக்கு சிங்களத்தலைவர்கள் கடமைப்பட்டிருந்தார்கள். பயந்து கொண்டிருந்தார்கள். ஆனால், இன்று ஒன்றரை இலட்சம் தமிழ் மக்களைக்கொன்று குவித்தவர்களை தமிழ்த்தலைவர்கள் என்று சொல்கின்ற அடிமைகள் ஜெனீவா வரை சென்று சர்வதேச விசாரணையின்றி மீட்டிருக்கின்ற நிலையில், இன்று எம்மை சிங்கள மக்கள் துரத்தி துரத்தியடிக்கின்றார்கள்.


எனவே, எமது மக்கள் சிந்திக்க வேண்டும். எமது வாக்குகளைப்பெற இன்று பொது வேட்பாளர்களை நிறுத்தியிருக்கின்றார்களா? இவ்வாறானவர்கள் தான் அரசுடன் பேரம் பேசுவார்களா? என்பதை எமது மக்கள் நன்றாகச்சிந்திக்க வேண்டுமென செல்வராஜா கஜேந்திரன் குறிப்பிட்டார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe