பாறுக் ஷிஹான்.
சுமார் 4 அரை இலட்சம் ரூபா பெறுமதிமிக்க ஐஸ் போதைப்பொருட்களுடன் கைதான சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம், கல்முனை விசேட அதிரடிப்படையின் விசேட தேர்ச்சி பெற்ற புலனாய்வுப் பிரிவின் தகவலுக்கமைய நீண்ட நாட்களாக சூட்சுமமான முறையில் ஐஸ் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் விநியோகம் செய்து வந்த குறித்த சந்தேக நபரை சாய்ந்தமருது பிரதான வீதியில் வைத்து செவ்வாய்க்கிழமை (3) கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் சம்மாந்துறை பகுதியிலுள்ள கல்வித் திணைக்களத்தில் பணி புரிவதுடன், சூட்சுமமாக ஐஸ் போதைப்பொருளை சாய்ந்தமருது உட்பட கல்முனைக்கு நீண்ட காலமாக விநியோகித்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
43 வயது மதிக்கத்தக்க குறித்த சந்தேக நபர் 25 கிராம் ஐஸ் போதைப்பொருளினை பைகளில் உறையிடப்பட்டு மிக சூட்சுமமாக கடத்தி வந்துள்ள நிலையில், மோட்டார் சைக்கிளுடன் கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்கு சந்தேக நபர் மற்றும் சான்றுப்பொருட்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர்.
மேலும், இந்நடவடிக்கையானது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மாஅதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எஸ்.பி குணசிறியின் அறிவுறுத்தலுக்கமைய மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட உதவிப்பொலிஸ் அத்தியட்சகர்களான சம்பத் குமார, அசித ரணசூரிய ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்க தலைமையிலான அதிகாரிகள் இந்நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.