சம்மாந்துறை நிருபர் தில்சாத் பர்வீஸ்.
சம்மாந்துறையில் நேற்று (16.9.2024) இரவு 10.45 மணியளவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒரு பிள்ளையின் தந்தை ஸ்தலத்தில் மரணமடைந்துள்ளார்.
ஒன்றுவிட்ட இரு சகோதர்களுக்கு இடையே நடைபெற்ற தகராற்றின் போதே துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி ரிப்பிட்டேஸ் வகையை சார்ந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் சம்மாந்தறை 02ஆம் பிரிவில் ஜே ப்ளோக்கைச் சேர்ந்த பக்கீர் முகையதீன் றோஜான் (வயது 29) என்பவரே மரணமடைந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்த பக்கீர் முகையதீன் றோஜான் தனது ஒன்று விட்ட சகோதரரான ஆதம்பாவா முஹம்மது அசாத் (வயது 34) என்பவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இத்தகராறு முற்றிய நிலையிலேயே துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளதாக சந்தேகிகப்படுகின்றது.
இச்சம்பவம் இவர்களின் வீட்டு முற்றத்திலேயே இடம்பெற்றுள்ளது. இவர்களின் வீடுகள் இரண்டும் பக்கத்து பக்கத்தில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்துள்ள பக்கீர் முகையதீன் றோஜான் என்பவர் துப்பாக்கி சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஆதம்பாவா முஹம்மது அசாத் என்பவரின் மனைவியின் தங்கையை திருமணம் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதே வேளை, சந்தேக நபரான ஆதம்பாவா முஹம்மது அசாத் என்பவரை சம்மாந்துறைப் பொலிஸார் சூடு நடத்திய துப்பாக்கியுடன் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்தவரின் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூடு நிகழ்த்தியதாக கருதப்படும் துப்பாக்கிக்கு சட்ட ரீதியான உத்தரவாதப் பத்திரம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி சபீர் அஹமட் சடலத்தை பார்வையிட்டதுடன், பிரேத பரிசோனைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.