(பாறுக் ஷிஹான்)
மீன் பிடிப்பதற்காகச்சென்ற பெண்ணை முதலை இழுத்துச்சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
அம்பாறை மாவட்டம், சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிட்டங்கி ஆற்றை அண்டிய சொறிக்கல்முனை, புட்டியாறுப் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த பெண்ணை முதலை இழுத்துச் சென்றுள்ள சம்பவம் திங்கட்கிழமை (14) மாலை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் சொறிக்கல்முனையைச்சேர்ந்த 58 வயதான ஞானபிரகாசம் டூரியநாயகி எனும் பெண்ணையே இவ்வாறு முதலை இழுத்துச் சென்றுள்ளதுடன், இதுவரை அப்பெண்ணோ அல்லது சடலமோ மீட்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக ஆறுகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. காரைதீவு –மாவடிப்பள்ளி நீரோடையில் வழமையாக முதலைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இவைகளும் மழை வெள்ளத்துடன் கிட்டங்கி ஆறு உட்பட பல இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன.
இவ்வாறு முதலை நடமாட்டமுள்ள இடங்கள், அபாயகரமான பிரதேசங்களில் குறித்த பிரதேச சபைகள், சுற்றுச்சூழல் அதிகாரிகள், வன பரிபாலன சபையினர் பொதுமக்களுக்கு தெளிவூட்டும் வகையில் எச்சரிக்கை பலகைகளை காட்சிப்படுத்த வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.