(பாறுக் ஷிஹான்)
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான றிசாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம் மற்றும் அதாவுல்லாஹ் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் வருகையை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முப்படையினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (25) மாலை முதல் மறுநாள் சனிக்கிழமை (26) வரை அம்பாறை மாவட்டத்தின் பெரிய நீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, சவளக்கடை, நாவிதன்வெளி, சொறிக்கல்முனை ,வீரமுனை, சம்மாந்துறை, காரைதீவு, கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர், அட்டப்பளம், பாலமுனை, ஒலுவில், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, தம்பிலுவில், தம்பட்டை, திருக்கோவில், பொத்துவில் உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.
இதே வேளை, அம்பாறை மாவட்டம் பொத்துவில், அறுகம்பை பகுதி சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் இங்கு பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது.
இதன் காரணமாக கடும் பாதுகாப்புக்கெடுபிடிக்கு மத்தியில் பொதுமக்கள் தமது அன்றாட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், முக்கிய சந்திகள், இதர வர்த்தக நிலையங்களில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் புலனாய்வாளர்கள் என மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது தவிர, சந்தேகத்திற்கிடமாக இப்பகுதிகளுக்கு!வருகை தந்தவர்கள் துருவித்துருவி விசாரிக்கப்பட்டதுடன், தற்காலிக வீதித்தடைகள், பரிசோதனையும் பாதுகாப்புத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டது.
சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனை செய்யப்பட்டதுடன், இடையிடையே விசேட அதிரப்படையினரின் ரோந்து நடவடிக்கையும் இடம்பெற்றது.
வீடுகள், கட்டடங்களில் பாதுகாப்புத் தரப்பினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். சில இடங்களில் ட்ரோனின் உதவியுடன் வான் பாதுகாப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் தற்போது பொதுத்தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் தங்களது தேர்தல் பிரசாரங்களில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.