(பாறுக் ஷிஹான்)
கைத்துப்பாக்கி மற்றும் 143 தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ வீரரிடம் மேலதிக விசாரணைகள் பல கோணங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை, வாவின்ன, பரகஹகலே பகுதியில் வைத்து கடந்த 17.11.2024 அன்று மாலை கைது செய்யப்பட்ட நபர் பின்னர் இகினியாகல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அம்பாறை விசேட அதிரடிப்படை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத்தகவலின் பேரில் இகினியாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாவின்ன, பரகஹகலே பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மைக்ரோ ரக தானியங்கி கைத்துப்பாக்கி, 143 தோட்டாக்கள், இரண்டு தோட்டா மெகசீன்கள் மற்றும் ஆயுதங்களை சுத்தம் செய்யும் கருவியை தம்வசம் வைத்திருந்த சந்தெக நபர் கைது செய்யப்பட்டார்.
குறித்த கைதான சந்தேக நபர் 51 வயது மதிக்கத்தக்க முன்னாள் ஓய்வுபெற்ற இராணுவ சிறப்புப்படை வீரர் என்பதுடன், அவரது வீட்டுல்காணியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த 9 எம்.எம் துப்பாக்கி மற்றும் 143 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், மீட்கப்பட்ட துப்பாக்கியின் இலக்கம் அழிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் தொடர்பிலும் அவர் வசம் மீட்கப்பட்ட துப்பாக்கி தொடர்பிலும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், சந்தேநக நபர் குறித்த துப்பாக்கியை போர் நடைபெற்ற வேளை வட பகுதயில் கடமையிலிருந்து எடுத்து வந்தாரா?, விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகள் பாவித்த துப்பாக்கியா? அல்லது இராணுவ களஞ்சியசாலையிலிருந்து பெறப்பட்டு மறைத்து வைக்கப்பட்டதா?, பல்வேறு குற்றச்செயலுக்காக எடுத்து வரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டதா? எனப்பல கோணங்களில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி சட்டத்தரணி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் வருண ஜயசுந்தரவின் பணிப்புரையின் பிரகாரம் அம்பாறை வலய கட்டளை அதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எஸ்.பி.குணசிறி அவர்களின் வழிகாட்டலில் அம்பாறை முகாமின் பதில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.சம்பத்குமார, அம்பாறை விசேட அதிரடிப்படை முகாமின் பதில் முகாம் கட்டளை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் அமில நிரோஷன் ஜயசிங்க, உப பொலிஸ் பரிசோதகர் எச்.எம்.எஸ்.ரத்நாயக்க, பொலிஸ் சார்ஜன்ட்டுகளான ஹேரத் (9482 ), ரத்நாயக்க (69208), ஜயசிங்க (70820), பொலிஸ் உத்தியோகத்தர்களான மானலே (87290), யசரத்ன (87 810), குணரத் (25132) உள்ளிட்ட அதிகாரிகள் இச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.