வரவிருக்கும் ரமழான் மாதத்தை முன்னிட்டு, சவூதி அரேபியா 102 நாடுகளில் 700 தொன் பேரீச்சம்பழங்களை வழங்கவுள்ளது.
இது, இரண்டு புனித மசூதிகளின் காவலர் மன்னர் சல்மானின் பரிசாக வழங்கப்படும் பேரீச்சம்பழ வழங்கல் திட்டத்தின் ஒரு பகுதியாகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இம்முறை 200 தொன் அதிகமாக வழங்கப்பட உள்ளது.
மேலும், இந்த நன்கொடைத்திட்டமானது உலகளாவிய முஸ்லிம் சமுதாயத்திற்கான சவூதி அரேபியாவின் ஆதரவையும், உதவியையும் வலுப்படுத்துகிறது.
இந்த விநியோகத்தை, சவூதி தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து இஸ்லாமிய அலுவல்கள், பிரசாரம் மற்றும் வழிகாட்டல் அமைச்சகம் மேற்கொள்ள உள்ளது. இதுகுறித்து அந்நாட்டு அமைச்சர் ஷேக் அப்துல்லதீப்பின் அப்துல் அஸீஸ் அல்-ஷேக், “உலகம் முழுவதும் முஸ்லிம்களுக்கு உதவுவதில் சவூதி தலைமைகள் தொடர்ந்து வழங்கிவரும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்ததோடு, இத்திட்டம் சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விழுமியங்களை பரப்புவதை, சமாதானத்தை ஊக்குவிப்பதை மற்றும் தீவிரவாதத்தையும், மதத்தீவிரவாதத்தையும் எதிர்க்க உதவுவதாகவும்” குறிப்பிட்டார்.
பொருத்தமான நேரத்தில் மக்கள் மத்தியில் விநியோகிப்பதற்கு பேரீச்சம்பழங்கள் அனுப்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன. இது, ரமழான் காலத்தில் இலட்சக்கணக்கான முஸ்லிம்களுக்கு உதவுவதாக இருக்கும். குறிப்பிடத்தக்கது என்னவென்றால், இலங்கைக்கும் சமீபத்தில் 50 தொன் உயர் ரக சவூதி பேரீச்சம்பழங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது, இருநாடுகளுக்கிடையேயான உறவினை வலுப்படுத்துவதோடு, இலங்கையின் முஸ்லிம் சமுதாயத்திற்கு சவூதிஅரேபியாவின் தொடர்ச்சியான ஆதரவக்கும் சான்றாகவும் அமைகிறது.
நன்றி - தினகரன் மற்றும் காலித் ரிஸ்வான்.