பாறுக் ஷிஹான்.
சட்டவிரோத மதுபானம் காரணமாக பல சமூக மற்றும் குடும்பப்பிரச்சினைகள் எழுந்துள்ளதாகக்கூறி பொதுமக்கள் இலங்கை இராணுவத்திடம் முறைப்பாடொன்றினை மேற்கொண்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை கணபதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சிலரே கடந்த புதன்கிழமை (19) அன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்றினை மேற்கொண்டு இவ்வாறு இராணுவத்தின் உதவியை நாடியுள்ளனர்.
இதன் போது, சட்டவிரோத மதுபானத்தால் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் குடும்ப மோதல்கள் காரணமாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், சம்மாந்துறை பொலிஸார் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்று கூறியே போராட்டக்காரர்கள் இவ்வாறு மல்வத்தை பகுதியிலுள்ள இலங்கை இராணுவத்தின் 24வது காலாட்படை பிரிவு தலைமையகத்திற்குச் சென்று இராணுவ அதிகாரிகளிடம் தங்கள் குறைகளைத் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் குறித்து உரிய தரப்பினரிடம் தெரிவிக்க நடவடிக்கையெடுப்பதாக இராணுவ அதிகாரிகள் அம்மக்களிடம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.