சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மலையடிக்கிராமம் 01 பகுதியில் வீட்டினை உடைத்து தொலைபேசி மற்றும் பெறுமதி வாய்ந்த பொருட்கள் திருடப்பட்டதாக வீட்டு உரிமையாளர் 03 ம் திகதி சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த முறைப்பாட்டுக்கு அமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலதின் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது, வீரமுனை 04 பகுதியைச் சேர்ந்த ஒருவரும், மலையடிக் கிராமம் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய சந்தேக நபருமே கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து கையடக்க தொலைபேசிகளை சம்மாந்துறை பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணையின் போது, கடந்த 26 ம் திகதி இரவு வேளையில் மையவாடி பகுதியில் வயதான பெண்மணியின் வீட்டில் நகை மற்றும் கையடக்க தொலைபேசிகள் கொள்ளையடித்தும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் இருவர் சம்மாந்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாக தகவல் அறிந்து வயதான பெண் நேற்றைய தினம் (04) சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் கடந்த 26 ம் திகதி வீட்டில் இரவு வேளையில் நகை மற்றும் கையடக்க தொலைபேசிகள் கொள்ளையடித்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
முறைப்பாடு அமைய வயதான பெண்மணியிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் " பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தால் உங்கள் இருவரையும் கொலை செய்வேன்" என்று அச்சுறுத்தியதாக வயதான பெண் பொலிஸாரிடம் தெரிவித்தார்.
இதனையடுத்து சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பாண்டிருப்பு 02 பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அத்துடன் கொள்ளையடித்த நகைகளையும் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவினர் மீட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலதின் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான சார்ஜன் டபிள்யூ.ஏ. சரத், பொலிஸ் உத்தியோகத்தர் எ.ம். நிரஞ்சன் உள்ளிட்ட அதிகாரிகள் இக் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.