இலங்கை முழுவதும் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறையை அரசாங்கம் நிவர்த்தி செய்யத் தவறியது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் கவலை தெரிவித்தார். கடந்த எட்டு மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் 52 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் பேசிய சஜித் பிரேமதாச, நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும் அரசாங்கம் மேற்கொண்ட உறுதியான நடவடிக்கைகள் குறித்தும் கேள்வி எழுப்பினார்.
“எந்தவொரு அரசாங்கத்தின் முதன்மை கடமை நாட்டு மக்களின் வாழ்வுரிமையை உறுதி செய்வதாகும். இருப்பினும், தற்போதைய துப்பாக்கிச் சூடு, கொலைகள் மற்றும் அச்சுறுத்தல்களைத் தடுப்பதில் இந்த அரசாங்கம் தெளிவாகத் தவறிவிட்டது,” என்றும் அவர் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவராகிய நான் உட்பட பல எம்.பி.க்கள் இந்த விஷயத்தில் அரசாங்கத்திடம் பலமுறை கேள்வி எழுப்பியுள்ளனர், ஆனால் இதுவரை எந்த பயனுள்ள தீர்வுகளும் முன்வைக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.
ஒழுங்கமைக்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மற்றும் வன்முறையின் அதிகரிப்பு பொது பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. முதலீட்டாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பிலான நம்பிக்கையை கேள்விக்குட்படுத்துகிறது எனவும் தெரிவித்துள்ளார். சாதாரண பாமர மக்கள் கூட போதைப்பொருள் வன்முறையின் மோதல்களில் சிக்கிக் கொள்கிறார்கள் என்பதையும், அரசாங்கத்தின் தற்போதைய போதைப்பொருள் எதிர்ப்புத் திட்டம் பயனற்றது என்றும் அவர் எடுத்துரைத்தார்.
"மரண அச்சுறுத்தல்கள் காரணமாக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் கூட ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது," என்று பிரேமதாச மேலும் கூறினார்.
உயிருக்கு ஆபத்தான அபாயங்களை எதிர்கொள்ளும் எம்.பி.க்கள் மற்றும் அரசு ஊழியர்களைப் பாதுகாக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதை விளக்குமாறு சபாநாயகர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் இருவரையும் பிரேமதாச கேட்டுக் கொண்டார்.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.