ஒரேயொரு வட்ஸ் அப் செய்தி மூலம் 1400 குடும்பங்களின் வயிற்றிலடித்த ஆடை தொழிற்சாலை : வேலை இல்லை, கையில் காசுமில்லை, செல்வதற்கு இடமுமில்லையென கண்ணீர் விடும் தொழிலாளர்கள்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் ஆடைதொழிற்சாலையொன்று திடீரென இழுத்து மூடப்பட்டுள்ளதால் 1461 தொழிலாளர்கள் நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் இயங்கும் முன்னணி ஆடைதொழிற்சாலை முன்னறிவித்தல் இன்றி தனது தொழிற்சாலையை மூடியுள்ளது.
ஒரே இரவில் 1461 தொழிலாளர்களை வேலையற்றவர்களாக்கியுள்ளதுடன் நிர்க்கதி நிலைக்கு தள்ளியுள்ளது. மே 19ம்திகதி இந்த தொழிற்சாலை மூடப்பட்டது.
பலவருடங்களாக அந்த தொழிற்சாலைக்காக தங்களை அர்ப்பணித்த தொழிலாளர்கள் பலர் ஆறு மணிவரை வேலைபார்த்துக்கொண்டிருந்தனர். இரண்டு மணிநேரம் கழித்து 8 மணியளவில் நாளை முதல் நிறுவனம் நிரந்தரமாக மூடப்படும் என்ற தகவல் வட்ஸ்அப் மூலம் தெரிவிக்கப்பட்டது.
எந்த வித முன்கூட்டிய தகவல்களும் இன்றி இந்த தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. வெளிநாடுகளிற்கு அடுத்தவாரம் ஆடைகளை அனுப்பும் பணிகளை பூர்த்தி செய்வதற்காக நாங்கள் நள்ளிரவு தாண்டியும் வேலை பார்த்துக் கொண்டிருந்தோம் என தெரிவிக்கும் தொழிலாளர்கள் நாங்கள் எதனையும் எதிர்பார்க்கவில்லை வழமை போல மறுநாளும் வேலை தொடரும் என்றே நினைத்திருந்தோம் என தெரிவிக்கின்றனர்.
என்னிடம் 4000 ருபாய் மாத்திரம் இருந்தது. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு நேற்று 2500 ரூபாய் கடன் வாங்கினேன். நாளைக்கு எனது பிள்ளைகளிற்கு சமைப்பதற்கு கோழி இறைச்சியும் வாங்கினேன் இதற்போது எனக்கு வேலை இல்லை. கையில் காசும் இல்லை செல்வதற்கு இடமும் இல்லை என கண்ணீருடன் தெரிவித்துள்ள பெண்ணொருவர் நாங்கள் எங்கள் உயிரை கொடுத்து பணிபுரிந்த இந்த நிறுவனம இதனை செய்யும் என நாங்கள் ஒருபோதும் நினைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இது வெறுமனே தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழத்தல் மாத்திரமல்ல 1400 குடும்பங்கள் திடீரென ஸ்திரதன்மை இழக்கும் நிலை.
தொழிலாளர்கள் தாங்கள் முன்கூட்டியே எதனையும் அறிந்திருக்கவில்லை என தெரிவிக்கின்றனர்.
நிறுவனம் இழப்பீடுகள் குறித்து தெரிவித்துள்ள போதிலும்,பொருளாதார உணர்வுரீதியான தாக்கங்கள் அதனையும் மீறியவையாக காணப்படுகின்றன.
எந்த வித முன்கூட்டிய தகவலும் இன்றி தொழிலாளர்களை வேலையிலிருந்து நிறுத்துவது வாழ்வதற்கான உரிமையை பறிக்கும் செயல் என தெரிவித்துள்ள தொழிலாளர் ஒருவர் இழப்பீடு என்பது சிலநாட்களிற்கே போதுமானது,அதன் பின்னர் என்ன செய்வது,எங்களிற்கு பிள்ளைகள் உள்ளனர் வீட்டு வாடகை கட்டவேண்டும்வேறொரு வேலையை தேட நேரமும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.
நிறுவனங்கள் சட்டரீதியில் தங்கள் நடவடிக்கைகளை முடித்துக்கொள்ளலாம் என்றாலும் உரிய முன்னறிவிப்பு வெளிப்படை தன்மையின்றி இதனை செய்வது,மனிதாபிமானமற்றது, ஒழுக்கமற்றது.
இந்தவகையான திடீர் பணிநிறுத்தம் குறிப்பாக பெண்கள், இளம் தொழிலாளர்கள் மற்றும் குடும்பத் தொழிலாளர்கள் மத்தியில் மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்துகிறது, அவர்களில் பலர் ஏற்கனவே இலங்கையின் தற்போதைய பொருளாதார சூழலில் விளிம்புகளில் வாழ்கின்றனர்.
அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்ற கவலை அதிகரித்து வருகிறது. சுதந்திர வர்த்தகவலயத்தில் தொழிற்சாலை மூடல்கள் நியாயமாகவும் முன்கூட்டியே தகவல் வழங்கப்படுபவையாகவும்கண்ணியமாகவும் நடப்பதை உறுதிசெய்ய முதலீட்டு வாரியமும் இலங்கை அரசாங்கமும் விசாரணை செய்து முதலீட்டாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி கொள்கைகளை வகுக்க வேண்டும்.
இந்த கடினமான நேரத்தில் மனித மேம்பாட்டுக்கான புரட்சிகர இருப்பு (red) பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுடன் ஒற்றுமையுடன் நிற்கிறது. எங்கள் உதவி மையம் மூலம் எங்கள் சமூகப் பொறுப்பின் ஒரு பகுதியாக தகவல் வழிகாட்டுதல் மற்றும் உணர்ச்சிபூர்வமான ஆதரவை நாங்கள் வழங்குகிறோம்.
இருப்பினும் ஒரு சிறிய இலாப நோக்கற்ற அமைப்பாக red 1461 தொழிலாளர்களின் முழு சமூக மற்றும் மனநலத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கவில்லை. எனவே அனைத்து சிவில் சமூக அமைப்புகள் தொழிலாளர் உரிமைகள் குழுக்கள் - தொழிற்சங்கங்கள் மனநல நிபுணர்கள் மற்றும் அரசாங்கம் இந்த நெருக்கடியான தருணத்தில் ஒன்றிணைந்து இந்த சகோதரிகள் மற்றும் சகோதரர்களை ஆதரிக்குமாறு நாங்கள் அவசரமாக வேண்டுகோள் விடுக்கின்றோம்.
நன்றி - வீரகேசரி.