Ads Area

9 மாணவர்கள் மீது கொடூரத்தாக்குதல் - பாடசாலை அதிபரான பௌத்த துறவியின் மூர்க்கத்தனமான செயல்.

 பாறுக் ஷிஹான்.


9 மாணவர்கள் முழங்காலில் நிற்க வைக்கப்பட்டு தாக்கிய சம்பவமொன்று அம்பாறை நகர அரச பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது.


ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒன்பது மாணவர்களை பாடசாலை அதிபரான பௌத்த துறவி கொடூரமாகத் தாக்கியதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.


கடந்த 15ம் திகதியன்று பாடசாலை நேரத்திற்குப்பின்னர் பிரத்தியேக வகுப்புகள் நடைபெற்றன. இதன் போது  அன்றைய தினம் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட இடைவேளையின் போது  ​கழிப்பறைக்குச்சென்ற பல குழந்தைகள் தண்ணீர் விசிறி சிறு விளையாட்டில் ஈடுபட்டதாக வகுப்பு ஆசிரியரால் பாடசாலை அதிபருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.


இதற்கமைய மறுநாள் (16.05.2025) பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் பாடசாலை அதிபர் தனது கையில் மூன்று பிரம்புகளை எடுத்து ஒன்பது குழந்தைகளையும் வரவழைத்து முழங்காலில் நிற்க வைத்து அவர்களின் கைகளை சுவரில் வைத்து பிரம்புகள் உடையாதளவுக்கு பிள்ளைகளின் முதுகில் கொடூரமாக அடித்துள்ளார்.


பின்னர் வீடு திரும்பிய பாதிக்கப்பட்ட பிள்ளைகள் நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்தனர். பெற்றோர்கள் பிள்ளைகளைப்பரிசோதித்த போது  ​அடிபட்டதால் ஏற்பட்ட வீக்கம் மற்றும் வலி நிறைந்த காயமுள்ள பகுதிகளை அடையாளங்காண முடிந்தது.


பின்னர் இச்சம்பவம் தொடர்பாக பெற்றோர்கள் கல்வி அலுவலகத்தில் முறைப்பாடு மேற்கொள்ளத்தயாராகிக் கொண்டிருந்த போது, அப்பாடசாலை அபிவிருத்தி சங்கத்தைச்சேர்ந்த பெற்றோர்கள் குழு தாக்குதல் காரணமாகப் பாதிக்கப்பட்ட குழந்தைகளை தொடர்பில் சட்ட நடவடிக்கையெடுக்க வேண்டாமென்று அழுத்தம் கொடுத்தது.


எனினும், இன்று சிறுவர் மறுவாழ்வு மையம் அம்பாறை வலயக் கல்விப்பணிப்பாளர்  மற்றும் அம்பாறை  மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் இப்பிள்ளைகள் மீதான தாக்குதல்கள் குறித்து எழுத்துப்பூர்வமாக முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளனர்.


இதே வேளை, அம்பாறை வலயக் கல்விப்பணிப்பாளர்   இத்தாக்குதல் குறித்து கல்வி அலுவலகம் உடனடியாக விசாரணையைத்தொடங்கும் எனக்கூறினார்.


தாக்குதலினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின்  ஒரு தாய் நாங்கள் எங்கள் குழந்தைகளை கற்றுக்கொள்ள பள்ளிக்கு அனுப்புகிறோம். குழந்தைகள் வித்தியாசமான செயல்களைச்செய்பவர்கள். இக்குழந்தைகள் சிறு  வயதுடையவர்கள். கால்நடைகளை அடிப்பது போல் அவர்களை அடிக்க முடியுமா?' எனக்கேள்வி எழுப்பினார். என் குழந்தைகள் அந்தப்பள்ளிக்குத் திரும்பப்போக முடியாது என்கிறார்கள். எங்கள் பிள்ளைகள் இம்முறை   தரம் 5 பரீட்சை எழுதுகிறார்கள். அக்குழந்தைகளின் மனநிலை இப்போது எப்படி இருக்கும்? என கேள்விய்ர்ழுப்பினார். 


தாக்குதலுக்குள்ளான பிள்ளை இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்


நாங்கள் இடைவேளையின் போது கழிப்பறைக்குச் சென்றதாகவும்  பல பிள்ளைகள் தண்ணீரைப் பயன்படுத்தி விளையாடிக்கொண்டிருந்ததாகவும் கூறினார். 


நாங்கள் வகுப்புக்குத்திரும்பியதும்  வகுப்பாசிரியர் பாடசாலை அதிபரான துறவியிடம் இதைப்பற்றிச் சொன்னார். அதன் பிறகு அவர் மூன்று பிரம்புகளைக் கொண்டு வந்து எங்கள் முதுகு வலிக்கும் வரை அடித்தார். 


நாங்கள் சத்தமாக அழுதோம். ஆனால், அவர் எங்களை அடித்தார். அடிக்க வேண்டாம் என்று கெஞ்சினோம். அவர்  எங்களை அடித்தார். எனவே, இப்போது இப்பள்ளிக்குப் போக முடியாது என்றார்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe