சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்.
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வத்தை பகுதியிலுள்ள வயல் பிரதேசத்தில் பல காலமாக சூட்சுமமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் இன்று திங்கட்கிழமை (19) காலை வேளையில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவினரினால் முற்றுகையிடப்பட்டது.
சம்மாந்துறை பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கையின் போது மல்வத்தை காத்தான்ட வட்டைப்பகுதியில் ஆற்றங்கரை அருகில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கசிப்பு உற்பத்திக்கு தயாராகவிருந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, கசிப்பு உற்பத்திக்காக தயார் நிலையிலிருந்த பொருட்கள் மீட்கப்பட்டதுடன் சந்தேக நபரைக்கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் போது, 2 பரள் கோடா, பழ வகைகள், கொள்கலன்கள் ஆகியன மீட்கப்பட்டு, சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், இக்கைது நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசாரின் ஆலோசனைக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலதின் வழிகாட்டுதலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவுப்பொறுப்பதிகாரி என்.றிபாய்டீன் தலைமையிலான குழுவினரினால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.