பாறுக் ஷிஹான்.
குமண தேசிய பூங்காவிற்குள் அத்துமீறி நுழைந்து வனவிலங்குகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியை படகு மூலம் கடத்திச்சென்ற ஆறு பேரை விசேட அதிரடிப்படையினர் (STF) கைது செய்துள்ளனர்.
அறுகம்பே விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத்தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட தொடர் சுற்றிவளைப்புகளின் போதே இச்சந்தேக நபர்கள் பிடிபட்டுள்ளனர்.
அதிரடிப்படையினரின் கடந்த சில தினங்களில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனையின் போது இரண்டு வெவ்வேறு இடங்களில் சட்டவிரோதப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இதன் போது, கடற்கரைப்பகுதியில் வைத்து இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், 57 கடலாமை முட்டைகள் அவர்கள் வசமிருந்து மீட்கப்பட்டன.
வனவிலங்கு இறைச்சிகள் ஒரு தொகை மற்றுமொரு சோதனையில் மீட்கப்பட்டன. இதில் 17 கிலோ கிராம் மானிறைச்சி 56 கிலோ கிராம் காட்டெருமை இறைச்சி மற்றும் 16 கிலோ கிராம் மான் மற்றும் எருமையின் ஈரல் என்பன உள்ளடங்குகின்றன.
மேலும், கடல் வழியாக இந்த இறைச்சிகளைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு பைபர் படகு 25 குதிரைத்திறன் கொண்ட வெளிச்செல்லும் இயந்திரம் (Outboard engine) மற்றும் இரண்டு எரிபொருள் கொள்கலன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட இறைச்சி மற்றும் ஏனைய பொருட்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக லாகுகலை வனஜீவராசிகள் அலுவலகத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




