முன்னாள் ஈரான் ஜனாதிபதி அஹ்மதி னெஜாத் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக வெளியாகிய செய்தி தன்னை அதிர்ச்சியடையச் செய்ததாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார். மேலும், அவர் இலங்கைக்கு நெருங்கிய நண்பர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், அஹ்மதி னெஜாத் இலங்கை–ஈரான் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த முக்கிய பங்கு வகித்தார் என்று நாமல் ராஜபக்ஷ நினைவு கூர்ந்தார்.
2008ஆம் ஆண்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வந்தபோது, சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்துதல் மற்றும் உமா ஓயா பன்முக அபிவிருத்தித் திட்டம் போன்ற முக்கிய அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிக்க அஹ்மதி னெஜாத் முக்கிய பங்கு வகித்ததாகவும் அவர் கூறினார்.
மேலும், ஈரான் எப்போதும் இலங்கையின் உண்மையான நண்பராக இருந்துள்ளது என்றும், இந்த விமானத் தாக்குதலில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படும் அனைவரின் குடும்பத்தினருக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
“இந்த கடினமான நேரத்தில் ஈரான் மக்களுடன் நாங்கள் நிற்கிறோம். அனைத்து தரப்பினரும் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு, போரின் பாதையைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக கலந்துரையாடல்களை முன்னெடுக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

