Ads Area

சவுதி அரேபியா, குவைத் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!

மத்திய கிழக்கில் போர் குறைவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில், இன்று (மார்ச் 10) அதிகாலையில் சவுதி அரேபியா மற்றும் குவைத்தை நோக்கி ஈரான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது.


ஈரான் இன்று வளைகுடா நாடுகளில் மீண்டும் தாக்குதல் நடத்தியது. அதே நேரத்தில், வடக்கு ஈராக்கில் நடந்த வான்வழித் தாக்குதலில் ஐந்து ஈரானிய ஆதரவு போராளிகள் கொல்லப்பட்டனர்.


ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாய் மற்றும் பஹ்ரைனில் இன்று அதிகாலையில் ஏவுகணை தாக்குதலுக்கான சைரன்கள் ஒலித்தன. அதே நேரத்தில் சவுதி அரேபியாவின் எண்ணெய் வளம் மிக்க கிழக்குப் பகுதியில் இரண்டு ட்ரோன்களை அழித்ததாகவும், குவைத்தின் ராணுவம் ஆறு ஈரான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும் கூறியது.


இதுகுறித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "ஈரானில் இருந்து வரும் ஏவுகணை மற்றும் ட்ரோன் அச்சுறுத்தல்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வான் பாதுகாப்பு தற்போது பதிலளித்து வருகிறது" என்று குறிப்பிட்டுள்ளது.


இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசுவதோடு மட்டுமல்லாமல், ஈரான் அந்நாடுகளின் எரிசக்தி உள்கட்டமைப்பையும் குறிவைத்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 100 டாலர் விலையை எட்டியது. எனினும் இன்று அது 90 டாலர் என்ற அளவில் குறைந்துள்ளது.


போர் நீண்ட காலம் நீடிக்காது என்றும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் போக்குவரத்தை முடக்கினால், அமெரிக்கா ஈரானை மிகவும் கடுமையாகத் தாக்கும் என்றும் ட்ரம்ப் நேற்று (மார்ச் 9) எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe