✍️மஜீட். ARM
முப்பது வருடகால யுத்தம் காரணமாக முற்றாகச் செயலிழந்திருந்த அம்பாறை, மத்திய முகாம் பிரதேச வைத்தியசாலையின் மகப்பேறு பிரிவு, சுமார் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் நவீனமயப்படுத்தப்பட்டு இன்று மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் என மூன்று இன மக்களும் ஒன்றிணைந்து வாழும் மத்திய முகாம் பகுதியில் அமைந்திருந்த இந்த வைத்தியசாலை, யுத்த காலப்பகுதியில் ஏற்பட்ட இடப்பெயர்வுகள் மற்றும் மோதல்கள் காரணமாக பாரிய பின்னடைவைச் சந்தித்திருந்தது.
ஒரு கட்டத்தில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் மாத்திரமே தங்கியிருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட இவ்வைத்தியசாலை, யுத்தத்தின் பின்னர் படிப்படியாக மீளக்கட்டியெழுப்பப்பட்டது.
இருப்பினும், மகப்பேறு விடுதி வசதிகள் இல்லாத காரணத்தினால் இப்பகுதி கர்ப்பிணித் தாய்மார்கள் கல்முனை போன்ற தொலைதூரப் பகுதிகளுக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டிய பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர்.
சுமார் 36 வருடங்களுக்குப் பின்னர் இப்பிரச்சினைக்குத் தீர்வாக, வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் கடின உழைப்பிலும், இப்பகுதி மக்களின் நிதிப் பங்களிப்புடனும், சி.ஐ.சி (CIC) நிறுவனத்தின் நிதியுதவியுடனும் இந்த மகப்பேறு பிரிவு நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்டுள்ளது. இப்பணியில் மூன்று இன மக்களும் ஒன்றிணைந்து பங்களிப்பு வழங்கியமை இனநல்லிணக்கத்தின் முக்கிய அடையாளமாகக் கருதப்படுகிறது.
வைத்தியசாலையின் வைத்தியப் பொறுப்பதிகாரி டொக்டர் இசுரு எரந்த அவர்களின் ஆலோசனையின் பேரில் நடைபெற்ற இந்தத் திறப்பு விழாவில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சஹிலா ராணி இஷ்தீன் மற்றும் சி.ஐ.சி நிறுவனத்தின் மேலாண்மைப் பணிப்பாளர் வருண மதவன ஆரச்சி ஆகியோர் கலந்துகொண்டு பிரிவைத் திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வில் தீகவாபி ரஜமகா விகாராதிபதி போத்திவெல சந்தானந்த தேரர், அம்பாறை - மட்டக்களப்பு பிரதம சங்கநாயக்கர் கந்துனே சுச்சின்ன தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும், இந்து மற்றும் இஸ்லாமிய மத குருமார்களும் கலந்துகொண்டு ஆசி வழங்கினர். மேலும், பொலன்னறுவை தலைமையக பொலிஸ் பரிசோதகர் பத்திரண உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


.jpg)


