Ads Area

சவுதி அரேபியாவில் வீட்டுப் பணியாளர்களுக்கான புதிய சட்டங்கள் அமல்: தொழிலாளர்களுக்கு இனி கூடுதல் பாதுகாப்பு!

சவுதி அரேபியாவில் பணிபுரியும் வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும், பணிச்சூழலை மேம்படுத்தும் வகையிலும் அந்நாட்டு அரசு தொழிலாளர் சட்டத்தில் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்த புதிய சீர்திருத்தங்கள் பணியாளர் மற்றும் முதலாளி ஆகிய இருவருக்குமிடையே வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.


புதிய சட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:


01. வயது வரம்பு மற்றும் வேலை நேரம்.


குறைந்தபட்ச வயது: இனி 21 வயது பூர்த்தியடையாத எவரையும் வீட்டுப் பணியாளர்களாக நியமிக்க சட்டப்படி தடை விதிக்கப்பட்டுள்ளது.


வேலை நேரக் கட்டுப்பாடு: ஒரு பணியாளரின் தினசரி வேலை நேரம் அதிகபட்சமாக 10 மணிநேரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் வேலை வாங்க அனுமதி இல்லை.


02. ஓய்வு மற்றும் விடுமுறை உரிமைகள்.


இடைவேளை: தொடர்ந்து 5 மணிநேரம் வேலை செய்த பிறகு பணியாளர்களுக்குக் கட்டாயம் ஓய்வு வழங்கப்பட வேண்டும்.


தூக்கத்திற்கான ஓய்வு: நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 8 மணிநேரம் தொடர்ச்சியான ஓய்வு வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.


வார விடுமுறை: அனைத்து வீட்டுப் பணியாளர்களுக்கும் வாரத்தில் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய கட்டாய விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.


03. சம்பளப் பாதுகாப்பு மற்றும் மருத்துவ விடுமுறை.


மின்முறை ஊதியம்: சம்பள நிலுவை மற்றும் முறைகேடுகளைத் தவிர்க்க, இனி 'முசானத்' (Musaned) தளம் வழியாக மட்டுமே மின்னணு முறையில் (Electronic Payment) சம்பளம் வழங்கப்பட வேண்டும்.


மருத்துவ விடுமுறை: உடல்நலக் குறைவு ஏற்படும் பட்சத்தில், முறையான மருத்துவச் சான்றிதழைச் சமர்ப்பித்து, ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பைப் பெற்றுக்கொள்ள பணியாளர்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.


நோக்கம்.


இந்த புதிய விதிமுறைகள் மூலம் வீட்டுப் பணியாளர்களின் உழைப்பு சுரண்டப்படுவது தடுக்கப்படுவதோடு, சர்வதேச தரத்திலான தொழிலாளர் உரிமைகள் சவுதி அரேபியாவில் நிலைநாட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தகவல் - சம்மாந்துறை அன்சார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe