தேங்காய் எண்ணெயில் கலப்படம் - 05 வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு தலா 1 இலட்சம் ரூபா சரீரப்பிணை.
தேங்காய் எண்ணெயில் கலப்படம் மேற்கொண்ட கல்முனை, சாய்ந்தமருதுலுள்ள 05 வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு தலா 1 இலட்சம் ரூபா சரீரப்பிணை வழங்கப்பட்டுள்ளது.
கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் உணவுக்குப்பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெய் கலப்படத்தில் ஈடுபட்ட வியாபார நிலையங்கள் மீது வியாழக்கிழமை (2) கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதன் போது ஒவ்வொரு வர்த்தகர்களுக்கும் தலா 1 இலட்சம் ரூபா சரீரப்பிணை வழங்கப்பட்டு தண்டணை மற்றும் அபராதம் குறித்து அறிவிப்பதற்காக எதிர்வரும் மே மாதம் 1 மற்றும் 7 ஆந்திகதி மறுதவணைக்காக வழங்கு ஒததிவைக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் திடீர் சுற்றிவளைப்பு சோதனையின் போது கல்முனை பிரதேசத்தில் மூன்று வியாபார நிலையங்களிலும் சாய்ந்தமருதில் இரண்டு வியாபார நிலையங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வந்த தேங்காய் எண்ணெயில் இவ்வாறு கலப்படம் மேற்கொள்ளப்பட்டமை கண்டறியப்பட்டுள்ள நிலையில், வழக்குத்தாக்கல் மேற்கொள்ளப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
குறித்த தேங்காய் எண்ணெய் மாதிரிகள் பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டு பரிசோதிக்கப்பட்ட போது, கலப்படம் உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இவ்வியாபார நிலையங்களுக்கெதிராக அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை கல்முனை நீதவான் நீதிமன்றத்தினூடாக சட்டநடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை, கல்முனை மற்றும் அம்பாறை பகுதிகளில் குடிநீர்ப்போத்தலை அதிக விலைக்கு விற்ற வர்த்தகர்களுக்கு 01 இலட்சம் ரூபா அபராதம் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது.

