(சர்ஜுன் லாபீர்)
சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் நீண்டகாலமாக நிலவி வரும் பௌதீக வளப்பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்து, அதன் கல்வி நடவடிக்கைகளை மீளச் சீரமைப்பது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் நேற்று (28) கல்லூரியின் உதவி அதிபர் எம்.எம் சபான் தலைமையில் நடைபெற்றது.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இக்கலந்துரையாடல், கரையோர பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
அண்மையில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், கல்லூரியின் அபிவிருத்தி குறித்து ஆராய்வதற்காகப் பிரதேச செயலாளர் தலைமையில் ஒரு விசேட குழு நியமிக்கப்பட்டிருந்தது. அந்த விசேட குழுவின் தீர்மானத்திற்கு அமைவாகவே இன்றைய இந்த முக்கிய சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இக்கூட்டத்தில் குறிப்பாக, கல்லூரியின் பௌதீக வளங்களை மேம்படுத்துவதுடன், பல்வேறு காரணங்களால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள பாடநெறிகளைத் தாமதமின்றி மீள ஆரம்பிப்பது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. நவீன வேலைவாய்ப்புச் சந்தைக்கு அவசியமான தகவல் தொழில்நுட்ப (ICT) துறையை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும், அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளைச் சீரமைப்பது குறித்தும் இதன்போது முக்கிய இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன. அத்துடன், தொழில்நுட்பக் கல்வியின் முக்கியத்துவத்தை மக்கள் மத்தியில் கொண்டு சென்று, மாணவர்களை மீண்டும் கல்லூரியில் அதிகளவில் உள்வாங்குவதற்கான விழிப்புணர்வு நிகழ்வுகளைப் பிரதேச ரீதியாக முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். நௌசாத், சம்மாந்துறை அமைப்பாளரும் 'Clean Sri Lanka' திட்டத்தின் பிரதேச ஒருங்கிணைப்பாளருமான பிரதேச சபை உறுப்பினர் வை.பி. நவாஸ், முன்னாள் தென்கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் மன்சூர் ஏ. காதர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் பொதுமக்கள் தொடர்பு அதிகாரி எஸ்.எம் ஆரிப், பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் எம்.ஏ அஸ்ரப், ஆகியோர் கலந்து கொண்டனர்.





