நூருல் ஹுதா உமர்.
சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட செந்நெல் கிராமம் 2 பகுதியில் நீண்ட காலமாக பராமரிப்பின்றி புற்கள் மற்றும் புதர்களால் மூடப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தகுதியற்ற நிலையில் இருந்த பாதை, தற்போது சீரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பாதை பல ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு இடையூறாக இருந்ததுடன், அப்பகுதி மக்களால் பலமுறை அதிகாரிகளிடம் முறையிடப்பட்டிருந்தது. இருப்பினும், தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத நிலையில் இருந்தது.
இந்நிலையில், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களின் தலைமையில், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதேச சபை உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் உடனடி சீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் போது, பாதையில் காணப்பட்ட புதர்கள் மற்றும் புற்கள் அகற்றப்பட்டதுடன், வீதி மட்டப்படுத்தப்பட்டு மக்கள் பாதுகாப்பாகப் பயணிக்கக்கூடிய வகையில் மாற்றப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, அப்பகுதி மக்களின் நீண்டநாள் தேவையை பூர்த்தி செய்ததோடு, பிரதேசத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் முயற்சியாகவும் பாராட்டப்படுகிறது.
மேலும், இவ்வாறான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என பிரதேச சபை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


