Ads Area

சம்மாந்துறை, வீரமுனை, மற்றும் மருதமுனைப் பகுதியில் 33 லீற்றர் கசிப்பு, போதைப் பொருள் மற்றும் கஞ்சாவுடன் கைதான நபர்களிடம் விசாரணைகள் முன்னெடுப்பு.

 பாறுக் ஷிஹான்.

 

சம்மாந்துறையில் 33 லீற்றர் கசிப்புடன் கைதான பெண் சந்தேக நபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை புறநகர்ப்பகுதியான  வீரமுனை 03 பகுதியில் செவ்வாய்க்கிழமை (19)  மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது  தன்வசம் வைத்திருந்த 33 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்புடன் 40 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.


கிடைக்கப்பெற்ற இரகசியத்தகவலின் அடிப்படையில்  சம்மாந்துறை ஊழல் ஒழிப்புப்பிரிவுப் பொறுப்பதிகாரி  என்.ரிபாய்டீன் தலைமையிலான குழு வீட்டில் 22 போத்தல்களில் சூட்சுமமாக அடைத்து வைக்கப்பட்ட நிலையில் விற்பனைக்காக வைக்கப்பட்ட கசிப்பினை மீட்டுள்ளனர்.


அத்துடன், 25 வயது மதிக்கத்தக்க மலையடி கிராமம்  பகுதியைச்சேர்ந்த சந்தேக நபர் 10 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த நிலையில் கைதானார். குற்றச்சாட்டுடன் தொடர்புபட்ட  இச்சந்தேக நபர் தொடர்பிலும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


இது தவிர, கேரளா கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த மருதமுனை பகுதியைச்சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் கைதானார். இச்சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேற்குறிப்பிட்ட 3 சந்தேக நபர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


இக்கைது நடவடிக்கை கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என்.நிசாந்த பிரதீப் குமாரவின் ஆலோசனைக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்புப்பிரிவு பொறுப்பதிகாரி என்.றிபாய்டீன் தலைமையிலான பொலிஸார்  சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe