சம்மாந்துறை அன்சார்.
தேசிய நூலக ஆவணவாக்கல் சபையினால் வருடாந்தம் வெளியிடப்படும் சுற்றுநிருபத்திற்கு அமைவாக, இவ்வருடத்திற்கான தேசிய வாசிப்பு மாதச் செயற்பாடுகள் சம்மாந்துறையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான முதலாவது கலந்துரையாடல் கூட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
"வாழ் நாள் முழுவதும் எழுத்தே நண்பன்" எனும் உன்னதமான தொனிப்பொருளின் கீழ், கடந்த 03.06.2026 புதன்கிழமை அன்று மாலை 3.00 மணிக்கு இக்கலந்துரையாடல் ஆரம்பமானது. சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களின் தலைமையில் இக்கூட்டம் வழிநடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் யூ.எல்.ஏ. மஜீட், அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தின் சன சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ. பஸ்மிலா மற்றும் விடய முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சபீலா அமீர் அலி ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், பொது நூலகத்தின் நூலகர்களான ஏ.ஆர்.எம். இல்யாஸ், யு.எல்.எம். முஹிடீன், ஐ.எல்.எம். நஸீம் ஆகியோருடன் பிரதேச சபைக்குட்பட்ட ஏனைய நூலகப் பொறுப்பாளர்கள் அனைவரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இவ்வருட தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முதற்கட்ட நடவடிக்கைகள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, வாசிப்பு மாதத்திற்கான விசேட செயற்குழுவை அமைப்பது மற்றும் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலான பல்வேறு செயற்திட்டங்களை எவ்வாறு திறம்பட நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பில் இதன்போது விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

