பாறுக் ஷிஹான்.
14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை தொடர்ச்சியாக துஸ்பிரயோகம் மேற்கொண்டு தலைமறைவாகி இருந்த 41 வயதுடைய பௌத்த தேரரை மத்திய முகாம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம், மத்திய முகாம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுகந்தகம பகுதியில் அமைந்துள்ள விகாரையில் செவ்வாய்க்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன் போது விகாரையில் தங்கியிருந்த 5 இளம் பிக்குகளில் 3 இளம் பிக்குகள் அண்மையில் தப்பிச்சென்ற சம்பவம் தொடர்பில் அறிந்த ஊர் மக்கள் விகாரையை நோக்கி ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொள்ளத்தயாறான வேளை குறித்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மேலும், 2 இளம் பிக்குகளை பொலிஸார் வாக்குமூலம் பெறுவதற்காக விகாரையிலிருந்து அழைத்துச்சென்ற நிலையில் குறித்த சந்தேக நபரான 41 வயது பௌத்த தேரர் தீகவாவி பிரதேசத்திற்கு தப்பிச்சென்றிருந்ததாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.
மற்றுமொரு பௌத்த பிக்கு சகிதம் 41 வயதுடைய பௌத்த தேரர் தீகவாபி பகுதியிலிருந்து மத்திய முகாம் பொலிஸாரிடம் சரணடைந்ததைத்தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.
குறித்த சம்பவத்தில் வாக்குமூலம் வழங்கிய இரு இளம் பிக்குகளில் பாதிக்கப்பட்ட 14 வயதுடைய இளம் பிக்குவிடம் மத்திய முகாம் பொலிஸார் வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்டதுடன், மருத்துவ பரிசோதனைக்காக அம்பாரை மாவட்ட பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியிடம் அழைத்துச்சென்றுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் ஈடுபட்டு சந்தேகத்தில் கைதான 41 வயது சந்தேக நபரான பௌத்த தேரரை இன்று (3) அம்பாறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மத்திய மகாம் பொலிஸார் நடவடிக்கையெடுத்து வருகின்றனர்.

