(மின்மினி மின்ஹா)
உலக குருதிக் கொடையாளர் தினத்தை முன்னிட்டு, கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் சம்மாந்துறை உயர் தொழில்நுட்பவியல் நிறுவனம் (ATI) ஏற்பாடு செய்த இரத்ததான முகாம் அண்மையில் சிறப்பாக நடைபெற்றது.
நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ்.எல். முஸ்தபாவின் வேண்டுகோளுக்கிணங்க, தகவல் தொழில்நுட்ப உயர் தேசிய டிப்ளோமா முதலாம் ஆண்டு மாணவர்களின் அனுசரணையுடன் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் டீ. பிரபாஷங்கர் மற்றும் திட்டமிடல் வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.ஆர். நியாஸ் அஹமட் ஆகியோரின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் பேரில், இரத்த வங்கியின் மருத்துவக் குழுவினரின் ஒத்துழைப்புடன் இரத்ததான முகாம் திறம்பட நடைபெற்றது.
இரத்ததானத்தில் பங்கேற்று உயிர்காக்கும் உயரிய பணியில் ஈடுபட்ட குருதிக் கொடையாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நிகழ்வில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கியின் வைத்திய அதிகாரிகள், தாதிய உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மேலும், இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதற்கு அனுசரணை வழங்கிய நலன்புரிச் சங்க உறுப்பினர்கள், இரத்ததானம் வழங்கிய கொடையாளர்கள், ஒத்துழைப்பு வழங்கிய விரிவுரையாளர்கள், மாணவர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ்.எல். முஸ்தபா தனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
இரத்ததான முகாமில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் தன்னார்வத்துடன் இரத்ததானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.




