மஜீட். ARM
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட சதுரங்கச் சுற்றுத்தொடரில், சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. கடந்த ஜூன் 26, 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் திருகோணமலை, கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் மூன்று நாட்களாக இச்சுற்றுத்தொடர் நடைபெற்றது.
பலத்த போட்டிகளுக்கு மத்தியில் ஐந்து சுற்றுகளிலும் திறம்பட விளையாடிய சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம், போட்டியில் பங்கேற்ற சுமார் 30 பாடசாலைகளுள் 08 ஆவது இடத்தைத் தக்கவைத்துக்கொண்டு பாடசாலை வரலாற்றில் முத்திரை பதித்துள்ளது.
இச்சுற்றுத்தொடரில் 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் இப்பாடசாலையைச் சேர்ந்த இரு மாணவர்கள் 'Board Champion' பட்டம் வென்று, சான்றிதழ்களையும் பதக்கங்களையும் சுவீகரித்து பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் 10 BL வகுப்பைச் சேர்ந்த முஹம்மட் அர்சாட் முஹம்மட் ஹஸ்னி என்ற மாணவனும், 17 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் 10 BL வகுப்பைச் சேர்ந்த ஆதம் ஷெஸா மர்யம் என்ற மாணவியும் இம்மாபெரும் சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.
சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கும், போட்டிகளில் பங்கேற்ற ஏனைய இரு அணி வீரர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் கல்லூரி முதல்வர் அல்-ஹாஜ் ARM. உவைஸ் (நளீமி - SLPS-1) அவர்கள் பாடசாலை சமூகம் சார்பாகத் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவர்களை நேரில் அழைத்துச் சென்று வழிநடத்திய சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியர்களான AC. முஹம்மட் நவாஸ், ZA. சித்தி ருமைஸா, சதுரங்கப் பொறுப்பாசிரியர் A. ஹலீம் அஹ்மத் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களான KLM. சப்ரி, பாஸ்லியா, பாஸிலா, பாத்திமா, கோபிகா ஆகியோரின் அர்ப்பணிப்பான சேவையைப் பாராட்டி, முதல்வர் மற்றும் பாடசாலை சமூகம் தமது நன்றியறிதலைத் தெரிவித்துள்ளனர்.






