இலங்கையில் நிலவும் பன்முக வறுமையை ஒழித்து, கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் அனுசரணையுடன் "ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள்" எனும் புதிய தேசிய செயற்திட்டம் நாடளாவிய ரீதியில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மக்களின் வரிப்பணத்திலிருந்து 25,000 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் முன்னெடுக்கப்படும் இப்பாரிய செயற்திட்டம், கடந்த ஜூன் மாதம் 02ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உத்தியோகபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.
இதன் கீழ், சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் மூன்றாவது நிகழ்வாக, சம்மாந்துறை மல்வத்தை கிராமத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, பாரம்பரிய உணவு வகைகளை (எலபோஜி) தயாரித்து விற்பனை செய்யும் விற்பனை நிலையம் ஒன்றை நிறுவும் திட்டம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
குறிப்பாக, பிரதேச மக்களின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில், இந்த விற்பனை நிலையத்திற்கான அடிகல் நடும் நிகழ்வு நடைபெற்றதுடன், உணவு உற்பத்திக்குத் தேவையான இயந்திரங்கள் மற்றும் தொடர்புடைய உபகரணங்களை வழங்குவதற்கான உத்தியோகபூர்வ அனுமதி மற்றும் கையளிப்புப் பத்திரங்கள் இதன்போது உரிய சங்கத்திடம் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள ரத்னாயக்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன், கௌரவ அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா கலந்து கொண்டார். மேலும் சிறப்பு அதிதிகளாக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல். முஹம்மட் அஸ்லம், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினரும், கிளீன் சிறிலங்கா செயற்திட்டத்தின் சம்மாந்துறை பிரதேச ஒருங்கிணைப்பாளருமான வை.பி.எம். நவாஸ், பிரதேச சபை உறுப்பினர் எஸ்.டனோஜன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும், பிரஜா சக்தி சமூக அபிவிருத்தி குழுவின் தவிசாளர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து சிறப்பித்தனர்.




