மஜீட். ARM
ஒரு நகரின் உண்மையான அழகு என்பது அதன் விசாலமான வீதிகளிலும், அங்கு நிலவும் பாதுகாப்பான சூழலிலுமே தங்கியுள்ளது. இந்த உயர்ந்த நோக்கத்தை முன்னிறுத்தி, சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில், நகர வீதியோரங்களில் உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த நடைபாதை வியாபார நிலையங்களை அகற்றும் மற்றும் ஒழுங்குபடுத்தும் விசேட நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.
நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பொதுமக்களின் பயண வசதிகளை மேம்படுத்தவும், பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை இன்றியமையாததாகக் கருதப்படுகிறது.
சம்மாந்துறை பிரதேச சபை அதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பொலிஸார் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் எனப் பல தரப்பினரின் ஒன்றிணைந்த பங்களிப்புடன், இச்செயற்பாடு மிகவும் நேர்த்தியாக முன்னெடுக்கப்பட்டது.
நகரின் தூய்மையையும் பாதுகாப்பையும் பேணுவது வெறும் அதிகாரிகளின் கடமை மட்டுமல்ல, அது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பும் என்பதை உணர்ந்து, அழகான சம்மாந்துறையை உருவாக்க பொதுமக்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க முன்வர வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.



